ஹிரோஷிமா-ன் 68வது நினைவு நாள்: அணு குண்டு வீச்சில் உயிர் தப்பிய 2 லட்சம் ஜப்பானியர் பிரார்த்தனை
டோக்கியோ: இன்று ஹிரோஷிமா அணு குண்டு வீச்சின் 68 வது நினைவு நாள். அந்தக் கொடூர தாக்குதலில் உயிர் தப்பிய சுமார் 2 லட்சம் மக்கள் ஒன்று கூடி உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.
1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயம், ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அடுத்தடுத்து அணுகுண்டுகளை வீசியது. இதில் லட்சக் கணக்கான மக்கள் பலியாகினர். பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் அரிதியிட்டுக் கூற முடியாத படி, அந்நகரங்களில் தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கும் அதன் பாதிப்பு தொடரத்தான் செய்கிறது.
அதிகாலை நேரம் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தான் ஹிரோஷிமா மீது முதல் அணு குண்டு வீசப்பட்டது. இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் பலியானார்கள்.
அந்தக் கொடூரத் தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் மற்றும் அவர்களது சந்ததியினர், பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய வருடந்தோறும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
வழக்கம்போல், இந்தாண்டும், சுமார் 2 லட்சம் ஜப்பானியர்கள் இன்று காலை ஹிரோஷிமா நகரில் கூடி அணு குண்டு வீச்சில் பலியான மக்களின் ஆன்மா சாந்தியடைய ஊதுபத்திகளை ஏற்றி பிராத்தனை செய்தனர்.
பிராத்தனையில் பங்கு கொண்ட ஹிரோஷிமா நகர மேயர் கசுமி மட்சுயி இது குறித்துக் கூறுகையில், 'அணு குண்டு என்பது மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட கெடுதலான ஆயுதம். இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இந்த தீமையை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனவே, அணு உலைகளை மீண்டும் இயக்கும் முயற்சியை நமது அரசு கைவிட வேண்டும். அணு தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு வழங்குவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும்' எனத் தெரிவித்தார்.