சேரன் மகள் வழக்கு 2 வாரம் தள்ளி வைப்பு - தாமினி பள்ளி தாளாளர் வீட்டில் தங்க உத்தரவு
இயக்குனர் சேரனின் மகள் தாமினி, தனது காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். ஆனால் காதலன் மோசமானவன் என்பதால் மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று சேரன் மன்றாடி வருகிறார்.
இதற்கிடையில் சந்துருவின் தாயார் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்து, தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரினார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தாமினி நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது அவர் தன் காதலனுடன் செல்லவே விரும்புவதாக உறுதியாகக் கூறிவிட்டார். ஆனால் சேரன் இதனை ஏற்கவில்லை.
இந்த வழக்கில் சிறப்பு கவனம் கொண்டு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தாமினி மேஜர் என்பதால் அவரை காப்பகத்தில் இருந்து அழைத்து வந்து, மூத்த வழக்கறிஞர் பிரசாத்தின் வீட்டில் தங்க வைக்க நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
ஒரு நாள் கழித்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதுவரை தாமினியை அவர் ஏற்கெனவே படித்த ஷ்ரைன் வேளாங்கண்ணி பள்ளியின் தாளாளர் பிகேகே பிள்ளையின் வீட்டில் தங்கியிருக்க உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவு:
"இரண்டு தரப்பினரிடமும் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டோம். இப்படிப்பட்ட சூழ்நிலை வந்ததை ஒவ்வொருவரும் விவரித்தனர். தாமினியின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை இரண்டு தரப்பினரும் தெரிவித்தனர். அவர்கள் சொன்ன சில விஷயங்கள், இந்த வழக்கின் பிற்பகுதியில் விசாரிக்கப்படும்.
சமுதாயத்தில் பிரபலமானவர்கள் என்பதால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வேறு யாரும் புகுந்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளக் கூடாது.
தாளாளர் வீட்டில் தங்கலாம்
இரண்டு தரப்பினரும் கொடுத்துள்ள கருத்துகளை பரிசீலித்தோம். இரண்டு தரப்பினர் வீட்டிலும் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையின்படி, தாமினி நல்ல பாதுகாப்புடன் கூடிய வீட்டில் தங்குவதுதான் சிறந்தது என்று கருத்து தெரிவித்தனர்.
அதன்படி, தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ ஷெரைன் வேளாங்கண்ணி மேல் நிலைப்பள்ளியின் (தாமினி படித்த பள்ளி) தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் பி.கே.கே.பிள்ளையின் வீட்டில் இரண்டு வாரங்களுக்கு தங்குவதற்கு உத்தரவிடப்படுகிறது. இதற்கு தாமினியும், மற்ற தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். 21-ந் தேதி கோர்ட்டில் தாமினி ஆஜராக வேண்டும்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.