பரம்பரை ஆட்சியை தவிர்க்கவே ராகுல் திருமணம் செய்துகொள்ளவில்லை: காங். தலைவர்
காங்கிரஸ் செயலாளர் ஷ்யோராஜ் ஜீவன் வால்மிகி மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பரம்பரை ஆட்சியை தவிர்க்க தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று ராகுல் காந்தி உறுதியாக உள்ளார் என்றார்.
உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு கேட்டதற்கு, இல்லை பரம்பரை ஆட்சியை தவிர்க்க ராகுல் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று எங்கோ படித்தேன். நான் கூறியது தவறாகக் கூட இருக்கலாம். அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அதன் பிறகு அவர் குஜராத் முதல்வர் மோடியை தாக்கிப் பேசி பேச்சை மாற்றிவிட்டார்.
தாடியுடன் இருக்கும் அந்த மனிதர் குஜராத்தை முன்னேற்றவில்லை அழித்துவிட்டார் என்றார். மும்பையில் வாழ்பவர்கள் மகாராஷ்டிராவை விட குஜராத் வேகமாக முன்னேறுகிறது என்று நினைத்தால் அல்லது மோடி நம்மை விட குஜராத்தை நல்லபடியாக முன்னேறச் செய்கிறார் என்று நினைத்தால் அவர்கள் அங்கு சென்றுவிட வேண்டியது தானே என்றார்.