தமிழில் படித்து முதல் மதிப்பெண் எடுத்தால் ரூ.60,000 பரிசு: அமெரிக்கா தமிழ் கழகம் அறிவிப்பு
நியூயார்க்: தமிழ் வழியில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ. 60,000 ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின் தலைவர் அரசு செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் இரண்டாம் மொழிப் பாடமாக தமிழ் பாடத்தைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம் தொடங்கப்பட்டது.
அமெரிக்காவில் தற்போது 47 தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 35 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் தமிழ் வழியில் படிக்காமல் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கின்றனர். மேலும், தமிழ்த் தொலைக்காட்சிகளில் அதிக அளவு ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், தமிழகத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து வருகிறது.
இதனால், தமிழ் வழியில் படித்து தமிழ் பாடத்தில் அதிகளவு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ. 60,000 ரொக்கப் பரிசு வழங்கி மாணவர்களை ஊக்குவிக்க எங்களது அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் முடிவு செய்துள்ளது.
எனவே, நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் பயின்று தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்க உள்ளோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.