2 வயது சிறுவனுக்கு ‘ஹார்ட் அட்டாக்’: வேர்க்கடலை சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்...
மும்பை: மும்பையில் வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனுக்கு, தவறுதலாக வேர்க்கடலை நுரையீரலுக்குள் சென்றதால் மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளிடம் சாப்பாட்டுப் பொருள்களைத் தரும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சமயங்களில் விளையாட்டுக் கூட விபரீதத்தில் முடிந்து விட வாய்ப்பு உண்டு . எனவே எப்போதும் தகுந்த எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே மிகச் சரியான உதாரணம்...
வேர்க்கடலை விபரீதம்...
மும்பையில் வசித்து வரும் ரித்தேஷ், தாமினி தம்பதிகளின் இரண்டு வயது மகன் கிருஷ்ணா. இரண்டு நாட்களுக்கு முன்னர், அப்பார்ட்மெண்ட் வாசலில் அமர்ந்து வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
‘ஹாய்’யால் வந்த பிரச்சினை...
அப்போது அந்தப்பக்கமாக வந்த அண்டை வீட்டுக்காரரான ஒருவர் கிருஷ்ணாவின் முதுகில் ‘ஹாய்' எனச் செல்லமாகத் தட்டியுள்ளார். அந்த தட்டில் எதிர்பாராத விதமாக, வேர்க்கடலை ஒன்று கிருஷ்ணாவின் மூச்சுக்குழலில் விழுந்து விட்டது.
முதலுதவி கை கொடுக்கவில்லை....
இதனால் தொடர்ந்து இருமலும், மூச்சடைப்பும் ஏற்பட்டுள்ளது கிருஷ்ணாவுக்கு. வீட்டில் செய்த முதலுதவி எதுவும் கை கொடுக்காத காரணத்தால் அச்சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர் குடும்பத்தினர்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை...
அதற்குள் வேர்க்கடலை நுரையீரலுக்குச் சென்று விட, ஆக்ஸிஜன் செல்ல வழியில்லாமல் அச்சிறுவனுக்கு மாரடைப்பும் அதனைத் தொடர்ந்து வலிப்பும் ஏற்பட்டுள்ளது.
ஆல் இஸ் வெல்....
பின்னர் உடனடியாக செயற்கை சுவாச கருவிகள் பொறுத்தப்பட்டு, சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் கிருஷ்ணாவின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.