தேசிய உணவு சட்டத்தால் பொதுவிநியோகத்துக்கு பங்கம்- சுதந்திர தின உரையில் ஜெ. காட்டம்
சென்னை: மத்திய அரசின் தேசிய உணவு சட்டம் பொதுவிநியோகத்துக்கு பங்கம் விளைவிக்கும். ஆனாலும் தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டம் தொடரும் என்று சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:
சுதந்திரப் போரில் தமிழகமே முதல் வித்து
சுதந்திரத்தைப் பெற ஆங்கிலேயருக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோரின் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சி மகத்தானது.. இதுதான் இந்திய சுதந்திர போராட்டத்துக்கான முதல் வித்து,
இந்திய அளவில் சர்தார் வல்லபாய் படேல், பாலகங்காதர திலகர், அம்பேத்கர், நேதாஜி போன்ற பல தலைவர்கள் நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்டுள்ளனர். இந்திய விடுதலைப் போரில் தமிழர் பங்கு மகத்தானது. தமிழகத்தைச் சேர்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, சுப்பிரமணிய சிவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அயல்நாட்டு வீராங்கனை அன்னிபெசண்ட், வாஞ்சிநாதன் போன்ற எண்ணற்ற தலைவர்கள் ரத்தம் சிந்தியும் உயிரைக் கொடுத்தும் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இந்த விடுதலைத் திருநாளில் அனைத்து தியாகிகளுக்கும் வீரவணக்கம். சுதந்திரம் பல்வேறு பரிமாணங்களை கொண்டது. தனிமனித ஆற்றல்களைக் கொண்டுவருவதில் கல்வி முக்கிய பங்கு. இதனால் அனைவரும் கல்வி பயில் கட்டணமில்லா கல்வி, பேருந்து வசதி, சீருடை, நில வரைபட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
மக்கள் நலத் திட்டங்கள்..
மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மணவிகளுக்கு மடிக் கணிணிகள் வழங்கப்படுகிறது. கல்வி இடைநிற்றலை அறவே நிறுத்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 1075 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 51,757 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மருத்துவ காப்பீடு, தொழில்துறை வளர்ச்சி
டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே மிக அதிக அளவு ரூ12 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தாய், சிசு மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ750 கோடியில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2வது பசுமை புரட்சியை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள். உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை
\மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, பெட்ரோல் டீசல் கொள்கை, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை, சமையல் எரிவாயு உருளை எண்ணிக்கை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும் பெட்ரோல் ,டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளன.
இதனால் ஏழை எளிய சாமானிய மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு சிறப்பு அங்காடிகள், கூட்டுறவு அமைப்புகள், தோட்டக் கலைத்துறை, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பங்கம் விளைவிக்கும் உணவு சட்டம்
பொதுவிநியோகத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் தேசிய உணவு சட்டம் அமைந்துள்ளது. இந்த சட்டம் நடைமுறைபப்டுத்தப்பட்டால் தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் ரூ1 லட்சம் டன் அரிசி பற்றாக்குறை ஏற்படும்.
இதனால் உணவு பாதுகாப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதே நேரத்தில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் தொடர்ந்தும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக உரிமைகள்
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, என்.எல்.சி. பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களே வாங்கச் செய்தது, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்தது என தமிழகத்தின் உரிமைகளை நாம் நிலைநாட்டியுள்ளோம்.
கச்சத்தீவில் நமக்குள்ள உரிமைகளை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு
தியாகிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ7 ஆயிரம் 1.8.2013 முதல் ரூ9 ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ 3 ஆயிரத்து 500 -ல் இருந்து ரூ 4 ஆயிரத்து 500ஆக உயர்த்தப்படும் என்றார்