கனவு காணக் கற்றுத் தந்த கலாமின் ‘நிறைவேறாதக் கனவு’.....
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது இளம் பிராயத்துக் கனவு ஒன்று நிறைவேறாமல் போனது குறித்து தனது புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கலாமின் அந்தக் கனவு போர் விமானி ஆவது என்பதாம். அது நிறைவேறாமல் போனது இன்று வரை ஏக்கமாக இருப்பதாக கூறியுள்ளார் கலாம்.
'My Journey: Transforming Dreams into Actions' என்ற நூலை கலாம் எழுதியுள்ளார். அதில்தான் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நூலில் கலாம் கூறியுள்ள சில விஷயங்கள்.
ஜஸ்ட் மிஸ்
இந்திய விமானப்படையில் விமானி ஆகும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை வந்தது. மொத்தம் 8 விமானிகளுக்கான தேர்வு நடந்தது. அதில் போட்டியிட்டோரில் நான் 9வது இடத்தைப் பிடித்தேன். இதனால் நூலிழையில் வாய்ப்பு பறிபோய் விட்டது. பிறகு விமானியாவதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போனது.
ஏரோநாட்டிகல் என்ஜீனியர்
அப்துல் கலாம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
விமானி ஆவதே லட்சியம்
எனக்கு விமானி ஆவது என்பதுதான் சின்ன வயதிலிருந்தே கனவாக இருந்தது. அது முடியாமலேயே போய் விட்டது.
உயர உயரப் பறக்க ஆசை
விமானியாகி, வானில் உயர உயரப் பறக்க ஆசைப்பட்டேன். அது நிராசையாகவே போனது. இன்று வரை அது எனக்கு ஏக்கமாகவே உள்ளது.
2 நேர்முகத் தேர்வு
எனக்கு விமானப்படை விமானி தேர்வு தவிர டெல்லியில் உள்ள டெக்னிக்கல் வளர்ச்சி மற்றும் தயாரிப்பு இயக்குநரகத்திலிருந்தும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. டெல்லி தேர்வு எளிதாக இருந்தது. ஆனால் விமானப்படை தேர்வுதான் கடினமாக இருந்தது.
என்னிடம் ஸ்மார்ட்னஸ் இல்லையாம்
இந்திய விமானப்படை அதிகாரிகள் நேர்முகத்தேர்வின்போது படிப்பறிவு தவிர ஸ்மார்ட்னஸ்ஸையும் எதிர்பார்த்தனர். என்னிடம் அது இல்லை என்றும் கூறினர். இதுதான் நான் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம்.
25 பேரில் 9வது இடம்
மொத்தம் 25 பேர் கலந்து கொண்டனர். அதில் எனக்கு 9வது இடம் கிடைத்தது. ஆனால் மொத்த காலியிடமே 8தான்.
சாமியாராகக் கூட நினைத்தேன்
இதனால் நான் விரக்தியுற்றேன். பேசாமல் ரிஷிகேஷுக்குப் போய் வேறு பாதையில் திரும்புவோமா என்று கூட யோசித்தேன்.
ஆனால் திரும்பி வந்தேன்
ஆனால் தோல்விகளை வெற்றிப் படிக்கட்டுக்களாக்க வேண்டும் என்று நான் படித்திருந்ததால் திரும்பி வந்தேன். வேறு பாதையில் எனது கவனத்தைத் திருப்பினேன்.
எது கிடைக்கிறதோ அதுவே
வாழ்க்கையில் நமக்கு எது கிடைக்கிறதோ அதுதான் கிடைக்கும். இதுதான் நான் கற்றுக் கொண்ட பாடம். இதனால் அறிவியல் உதவியாளராக டெல்லி பணியில் இணைந்தேன் என்று கூறியுள்ளார் கலாம்.