காமன்வெல்த் போட்டியை சீர்குலைக்க திட்டமிட்டிருந்தான் தீவிரவாதி துண்டா...!
டெல்லி: டெல்லியில் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்டு வரும் 20 பயங்கர தீவிரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்தவன் இந்த துண்டா. இவனை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார் இந்திய-நேபாள எல்லையில் வைத்துப் பிடித்துள்ளனர்.
துண்டா பிடிபட்டிருப்பது ஏகப்பட்ட வழக்குகளுக்குப் புத்துயிர் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவில் நடந்த பல்வேறு வெடிகுண்டுச் சம்பவங்களில் இந்த துண்டாவுக்குத் தொடர்பு இருக்கிறது. இவன் மீது ஏராளமான வழக்குகளும் உள்ளன.
3 நாள் காவலில்
துண்டா தற்போது 3 நாள் காவலில் எடுக்கப்பட்டுள்ளான். அவனை டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
லஷ்கர் இ தொய்பாவின் முக்கியப் புள்ளி
லஷ்கர் இ தொய்பாவின் முக்கியப் புள்ளிதான் இந்த துண்டா. தற்போது 70 வயதாகிறது. தாவூத் இப்ராகிமுக்கும் மிக நெருக்கமான நபர் துண்டா.
21 வழக்குகள்
துண்டா மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், டெல்லி, பானிப்பட், சோனேபட், லூதியானா, கான்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் 1996 டிசம்பர் முதல் 1998 ஜனவரி நடந்த 40க்கும் மேற்பட்ட வெடிகுண்டுச் சம்பவங்களிலும் துண்டாவுக்குத் தொடர்பு உள்ளதாம்.
காமன்வெல்த் போட்டியை சீர்குலைக்க திட்டம்
இந்த நிலையில் 2010ல் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது நாச வேலையில் ஈடுபட துண்டா திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டுகளை வைக்கத் திட்டம்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், டெல்லியிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் ஏராளமான வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய துண்டா திட்டமிட்டிருந்தான். ஆனால் அவனது கூட்டாளிகளை அப்போது போலீஸார் கைது செய்ததால் இந்தத் திட்டம் தவிடு பொடியானது என்றனர்.
மும்பை சம்பவத்திலும் தொடர்பு
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் துண்டாவுக்கு் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
15வது முக்கிய தீவிரவாதி
மும்பையில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்திய சம்பவத்திற்குப் பின்னர் 20 பேர் கொண்ட தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. அதில் 15வது பெயராக துண்டா இடம் பெற்றிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லஷ்கரின் முக்கியப் புள்ளி
துண்டா, லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு மிகவும் நெருக்கமான நபர். மேலும் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணர்.
ஐஎஸ்ஐயின் கூட்டாளி
பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயுடன் இணைந்து 80களில் பல நாச வேலைகளில் இவன் ஈடுபட்டுள்ளான். மேலும் பலருக்கு வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொடுத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.