பத்திரிகையாளர்களுக்கு நுழைவுத் தேர்வு, லைசென்ஸ் .. 'ஐடியா' கொடுக்கும் மணீஷ் திவாரி!
டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய மணீஷ் திவாரி, கடந்த வாரம் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக செய்தி தொலைக்காட்சி சேனல் இப்படி நடந்து கொண்டது, ஊடகமும் வர்த்தகமயமாகிவிட்டது என்பதையே வெளிப்படுத்துகிறது.
அந்த சேனலின் பங்குதாரர்களில் ஒருவர் ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரைக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போய்விட்டார். என்னால் உதவ முடியாது போனாலும் வெளிப்படையாக ஊடகம் வர்த்தகமாகிப் போய்விட்டது என்று சொல்ல முடியும். நாடறிந்த நல்ல பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேர் அந்த சேனலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
மருத்துவ துறை மற்றும், பார் கவுன்சில் ஆகியவற்றில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது போல் பத்திரிகை துறையிலும் பொது நுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு பத்திரிகையாளர் ஆவதற்கான உரிமம் கொடுக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு, தரத்தை நிர்ணயிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சில பத்திரிகை நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றுவோருக்கு, சிறப்பான பயிற்சிகள் கொடுக்கின்றன. சில நிறுவனங்கள், இதுபோன்ற பயிற்சிகளை அளிப்பது இல்லை.
தற்போதைய சூழலில் பிரிண்ட் மீடியா மிகவும் நலிவடைந்து வருகிறது. அதன் சர்க்குலேசன் எண்ணிக்கை சரிந்து கொண்டிருக்கிறது. நாட்டில் 798 சேனல்கள் இருக்கின்றன. இதில் 415 செய்தி சேனல்கள். இவை அனைத்தும் விளம்பரங்களை நம்பியே இருக்கின்றன. இதனால் உணர்ச்சிவசப்பட வைக்கின்றன செய்திகளை முன்கூட்டியே கொடுக்க இவை முனைகின்றன. இதனால் தனிநபர் சுதந்திரத்தை மீறத் தூண்டுகிறது.
நம்மைப் பொறுத்தவரையில் பிரிண்ட் மீடியா, தொலைக்காட்சி, இணையம் அனைத்தும் ஒன்றுதான்.
அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கி, செய்திகளை வெளியிடும் போக்கை குற்றம் என அறிவிப்பது அபராதம் விதிப்பது, உரிமத்தை நிறுத்தி வைப்பது ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
டிவி சேனல்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது 12 நிமிடத்துக்கு ஒருமுறை மட்டுமே விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்ற ஆலோசனை குறித்து மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்து வருகிறது என்றார்.