மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு என்ன தண்டனை? தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!!
டெல்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு எதிரான தீர்ப்பை டெல்லி சிறார் நீதிமன்றம் அளிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு எதிரான தீர்ப்பு ஏற்கெனவே 4 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சிறார் குற்றவாளிகள் வரையறை தொடர்பாக பாரதிய ஜனதாவின் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த பொதுநலன் மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இதனால் இந்த வழக்கில் சிறார் நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை தீர்ப்பளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் சுப்ரமணியன் சுவாமியின் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இம் மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச்,. சுப்ரமணியன் சுவாமியின் மனுவை ஏற்பதாக அறிவித்தனர். இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீசும் அனுப்பி வைத்தனர்.
அதே நேரத்தில் வழக்கின் தீர்ப்பை டெல்லி சிறார் நீதிமன்றம் வெளியிடவும் அனுமதி வழங்கினர்.