கூடன்குளம் அணு உலை: இந்தியாவிலிருந்து 20 செய்தியாளர்கள் ரஷ்யா பயணம்
நெல்லை: கூடங்குளம் அணுஉலை பற்றி அறிந்து கொள்ளவும், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று வரவும் இந்தியாவில் பல்வேறு செய்தி நிறுவனங்களில் இருந்து 20 செய்தியாளர்கள் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு மின்நிலையம் இன்னும் ஒரு சில மாதங்களில் மின் உற்பத்தியை தொடங்க உள்ளது.
அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர பகுதி கிராம மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் 700நாட்களை தாண்டி நடந்துக் கொண்டிருக்கிறது.
முற்றுகைப் போராட்டம் முதல் பல்வேறு போராட்டங்களைத் தாண்டி இன்னும் ஓரிரு மாதங்களில் அணு உலை மின்சார உற்பத்தியை தொடங்க உள்ளது.
இந்நிலையில் அணு உலை சார்பிலும், அணு உலையை அமைக்கும் ரஷ்ய நிறுவனத்தின் சார்பிலும் தமிழகத்திலிருந்தும் மற்றும் டெல்லி, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 20 செய்தியாளர்கள் ரஷ்யாவுக்கு சென்றுள்ளனர்.
10 நாள் பயணமாக சென்றுள்ள இவர்கள் இங்கு அமைக்கப்பட்ட அணு உலை குறித்த ஏற்படும் சந்தேகங்களை அங்கு நேரில் சென்று விளக்கம் பெற்று திரும்ப உள்ளனர்.