நான் அமைச்சரானது எப்படி?: சொல்கிறார் ஜார்க்கண்ட் அமைச்சர்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளது. இந்நிலையில் அம்மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸைச் சேர்ந்த யோகேந்திர சாஹூ தனக்கு இந்த பதவி எப்படி கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் டெல்லியில் 15 நாட்கள் இருந்தேன். புதிய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பட்டியலில் முதலில் என் பெயர் இல்லை.
இதையடுத்து பதவிக்காக அகமது பட்டேல் முதல் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வரை பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருந்தது. நான் என்ன செய்தேன் என்பதை விளக்கமாக கூற முடியாது.
அரசியலில் ஒருவர் ஷூக்களை சரி செய்வது முதல் பஜனை செய்வது வரை பலவற்றை செய்ய வேண்டி உள்ளது. நான் ஒரு விவசாயியின் மகன். அதனால் தான் நான் விவசாயத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளேன். ஆனால் எனக்கு பல அமைச்சகங்கள் வேண்டும். நான் பிச்சை எடுப்பவன் இல்லை. எனக்கு எப்படி பறிப்பது, திருடுவது என்று தெரியும் என்றார்.
கடந்த 2010ம் ஆண்டில் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் வாங்க முன்வந்தபோது சாஹூ சிக்கினார். இது உள்பட அவர் மீது 11 வழக்குகள் உள்ளன. அதனால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் முதலில் தயங்கியது.
ஜார்க்கண்ட் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களைத் தேர்வு செய்ய அக்கட்சி 40 நாட்கள் எடுத்துக் கொண்டது.