கப்பலுக்குள் விஷ வாயு கசிவு... 2 பணியாளர்கள் மரணம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் நான்காவது சரக்கு தளத்தில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சரக்கு கப்பலில் இருந்து மரத்தடிகள் இறக்கும் பணிகள் நடந்தது. இந்த மரத்தடிகள் தூத்துக்குடியிலுள்ள செயின்ட் ஜான் தனியார் நிறுவனத்தின் மூலமாக இறக்குமதியானது.
சரக்கு கப்பலின் ஒரு கேப்சர் பகுதியில் மரத்தடிகள் இறக்கப்பட்ட பின்னர் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவன பணியாளர்கள் மரத்தடிகளை சரிபார்த்தனர். மரத்தடிகள் ஏதும் கப்பலின் உள்ளே உள்ளதா-? என்பதை பார்ப்பதற்காக தனியார் நிறுவன பணியாளர்களான தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த விக்டர்மோகன்(40), லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த ஜோபாய் (50) இருவரும் சரக்குகப்பலின் முதல் பகுதி கேட்சர் பகுதிக்குள் இறங்கி சோதனை மேற்கொண்டனர்.
இந்தநேரத்தில் அந்த தளத்தின் கதவு திடீரென்று மூடப்பட்டது. இதனால் உள்ளே சிக்கியவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். மேல்தளத்தில் நின்ற பணியாளர்கள் தங்களது சகபணியாளர்கள் இருவர் திடீரென்று மாயமானது கண்டு அவர்களை தேடினர்.
சரக்கு கப்பலின் கேட்சர் பகுதி மூடியை திறந்து பார்த்தபோது இரண்டு பணியாளர்களும் உள்ளே மயங்கி கிடந்தனர். உடனடியாக இருவரும் மீட்க்கப்பட்டு துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதற்கு முன்னதாகவே ஒருவர் இறந்துவிட்டார். தலையில் காயம் அடைந்த நிலையில் இருந்த மற்றொரு பணியாளர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் இருந்தபோதும் அவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இதுதொடர்பாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார் விபத்தினால் மரணம்(174) என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பலில் ஏற்றப்படும் மரத்தடிகளில் இருக்கும் விஷஜந்துகளான பாம்பு, தேள், பூரான் போன்ற உயிரினங்கள் இறப்பதற்காக மரத்தடிகள் ஏற்றியபின்பு கேட்சருக்குள் விஷமருந்து அடிப்பது வழக்கமாகும். இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடிகள் இறக்கியபின்பு அந்த கேட்சர் பகுதிக்குள் பணியாளர்கள் சிக்கியபோது அந்த விஷமருந்தின் விஷவாயு தாக்கத்தால் அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.