சாராய விற்பனையில் பங்கு கேட்டு தகராறு.. 2 சிறப்பு எஸ்.ஐக்கள் ரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை
சேலம்: சேலம் அருகே கள்ளச் சாராய கடத்தல் விவகாரத்தில் இரண்டு போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் நடு ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பாகிப் போனது.
சேலம் மாவட்டம் கரியகோயில் பகுதியில் வாகனங்களில் சாராயம் கடத்தப்படுவதாக கரிய கோயில் காவல் நிலையத்திற்கு ரகிசய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, எஸ்.எஸ்.ஐ. கோவிந்தன் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக டூ வீலரில் கேனுடன் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்தார்.
விசாரணையில், அவர் கருமந்துறை போலீஸ் எஸ்.எஸ்.ஐ. தர்மதேவராஜன் என்பதும், கேனில் மறைத்து கள்ளச்சாராயத்தை கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து எஸ்.எஸ்.ஐ. கோவிந்தன் ஒரு சிறப்பு டீலிங்கில் இறங்கினார். அதாவது, இந்த சம்பவத்தை மூடி மறைக்க வேண்டும் என்றால் சாராயம் கடத்தி விற்கும் லாபத்தில் தனக்கும் மாமூல் வேண்டும் என்று தர்மதேவராஜனிடம் கேட்டார்.
ஆனால் முடியாது என்று கூறினார் தர்மதேவராஜன். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.. அடுத்து என்ன அடிதடிதான்.. இருவரும் சாலை என்று கூட பார்க்காமல் கட்டிப் புரண்டு சண்டை போட ஆரம்பித்தனர்.
இதைப் பார்த்து மக்கள் கூட்டம் கேமாவென்று கூடி விட்டது. அதிலிருந்து சில பொறுப்பான பொதுமக்கள், விடுங்க சார், நீங்களே அடிச்சிக்கிட்டா எப்படி என்று உள்ளே புகுந்து விலக்கி விட்டனர். இன்னும் சில பொறுப்பானவர்கள், போலீஸ் கமிஷனருக்குப் போனைப் போட்டு தாக்கல் தெரிவித்தனர்.
இதையடுத்து சண்டை போட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மேலிடத்திலிருந்து நேரில் வருமாறு ஓலை வந்தது. இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறதாம்.
நமக்குத் தங்கப்பதக்கம் பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது...!