ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்தது: 2 நோயாளிகள் காயம்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் ரயில்வேபீடர் ரோடு பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. வெளிநோயாளிகள், பரிசோதனை மற்றும் டாக்டர்கள் அறை புதிய கட்டிடங்களில் இயங்கி வருகிறது. ஆனால் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகள், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இதில் ஆண் நோயாளிகள், பெண் நோயாளிகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கான வார்டுகள் என மூன்று பிரிவுகள் இயங்கி வருகிறது. இதில் ஆண் நோயாளிகள் வார்டில் 22 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடுமுழுவதிலும் இருந்து பக்தர்கள் வரும் யாத்திரை தளமாகவும், இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை நாள்தோறும் சந்தித்து வரும் மீனவர்களின் பிரதான பகுதியாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் போதிய வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை இல்லை. நாள் தோறும் 800க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் இந்த அரசு மருத்துவமனையில் போதிய கட்டட வசதிகள் இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
இந்நிலையில், இன்று காலை ஆண்கள் வார்டில் தங்கியிருந்த நோயாளிகளை பரிசோதிக்க பெண் மருத்துவர் மீனாகுமாரி சென்றார். மருத்துவர் வருவதால் நோயாளிகளை பார்க்க வந்திருந்த உறவினர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மருத்துவரின் பரிசோதனை முடிந்து நோயாளிகள் மாத்திரை பெறுவதற்காக ஆண்கள் வார்டின் முன்புறம் உள்ள பகுதிக்கு வந்திருந்தனர்.
அப்போது, வார்டின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், உள்நோயாளிகளான சூசையம்மாள், செல்வமேரி ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆண்கள் வார்டில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
காயமடைந்த இருவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மருத்துவ அதிகாரி அங்காரெட்டி பெயர்ந்து விழுந்த வார்டை பார்வையிட்டார்.
இங்கு கட்டப்பட்டு வந்த நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடியாமல் அரைகுறையாகவே இருக்கிறது. நோய் தீர்க்கும் இடமான அரசு மருத்துவமனையே நோயாளிகளை உருவாக்கும் இடமாக மாறி வருவதை, அரசு உடனே நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் எழுந்துள்ளது.