செப்டம்பர் 6ம் தேதிக்குப் பிறகு மோடிக்கு 'முடி சூட்டு விழா'?
டெல்லி: செப்டம்பர் 6ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும், நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்கவுள்ளதாக டெல்லியிலிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடிதான் தங்களது பிரதமர் வேட்பாளர் என்று பாஜக முடிவு செய்து விட்டது. அதன் அடிப்படையிலையே ஒவ்வொரு வேலையாக செய்து வருகின்றனர். அந்த நோக்கத்தில்தான் மோடிக்கு லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவியும் தரப்பட்டது.
ஆனால் கூட்டணிக் கட்சிகள் சில அதற்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருவதாலும், கட்சிக்குள்ளேயே மூத்த தலைவர்கள் பலர் கடுப்பாகி இருப்பதாலும், வெளிப்படையாக இன்னும் அறிவிக்காமல் உள்ளனர். ஆனால் தற்போது முடிவை அறிவிக்க தீர்மானித்து விட்டதாக தெரிகிறது.
மோடியை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவித்து விட்டால் லோக்சபா தேர்தலில் எப்படியும் 200 இடங்களைப் பிடித்து விடலாம் என்று கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் கூறி வருகிறாராம். மேலும் கூட்டணிகளை புத்திசாலித்தனமாக அமைத்தால் ஆட்சியைப் பிடிப்பது எளிதாகி விடும் என்றும் அவர் கருதுகிறார்.
எனவே அந்த கோணத்தில் தற்போது பாஜக காய் நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ராஜ்நாத் சிங் வீட்டில் ஒரு அவசர கூட்டம் நடந்தது. அதில் பாஜக எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் செதியாளர்களிடம் பேசுகையில், எம்பிக்கள் அனைவரும் ராஜ்நாத் சிங்கின் இல்லத்தில் கூடினர்.
ராஜ்நாத் சிங் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும் என்றார். ஆனால் இக்கூட்டத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பின்னர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயாராகி விட்டதாகவே தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.