சிரியா மீது ராணுவ நடவடிக்கை: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அரசின் தீர்மானம் தோல்வி!
ரசாயன குண்டுகளை வீசி பொதுமக்களை படுகொலை செய்தது சிரியா அரசு என்று புகார் கூறி அந்நாடு மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக தமது நட்புநாடுகளுடனும் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஒப்புதல் கோரும் தீர்மானத்தை பிரதமர் கேமரூன் தாக்கல் செய்தார். இத்தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் அரசின் தீர்மானம் 13 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிரியா மீதான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 285 வாக்குகளும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று 272 வாக்குகளும் பதிவாகின.
இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கேமரூன், நாடாளுமன்றத்தில் அரசின் தீர்மானம் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்கிறேன். அமெரிக்காவுடன் இங்கிலாந்து இணைந்து சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளாது என்றார்.