விதான செளதாவில் மீண்டும் தலைதூக்கும் ஆபாசம்... சீன் படம் பார்க்கும் அரசு ஊழியர்கள்!
பெங்களூர்: பெங்களூர் விதான செளதாவில் உள்ள அரசு அலுவலக கம்ப்யூட்டர்களில் ஊழியர்கள் சிலர் ஆபாசப் படம் பார்த்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அரசு அலுவலகங்களில் உள்ள அத்தனை கம்ப்யூட்டர்களிலும் பயர்வால் போட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அலுவலகப் பயன்பாட்டைத் தவிர வேறு எதற்கும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே ஆபாசப் படம் பார்த்து சிக்கிய நிலையில் தற்போது சட்டசபை அமைந்துள்ள விதான் செளதாவில் அரசு ஊழியர்கள் ஆபாசப் படம் பார்த்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ விசாரணை
விதான செளதாவில் அரசு ஊழியர்கள் ஆபாசப் படம் பார்க்கும் விவரத்தை சிபிஐதான் கர்நாடக அரசிடம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பா அறிக்கையையும் சிபிஐ கர்நாடக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அவசர நடவடிக்கைக்கு பரிந்துரை
சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், விதான செளதாவில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் அரசு ஊழியர்கள் ஆபாசப் படம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயர்வால் போடுங்க
உடனடியாக அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் பயர்வால் பொருத்த வேண்டும். அலுவலகப் பணிகள் தவிர வேறு உபயோகத்திற்கு கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதை உத்தரவாக கர்நாடக அரசு உடனடியாக பிறப்பித்துள்ளது.
துரதிர்ஷ்டவசமானது...
இதுகுறித்து கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் கூறுகையில் இது வருத்தம் தரும் விஷயம். துரதிர்ஷ்டவசமானு. சில ஊழியர்கள் தவறான செயலில் ஈடுபடுவது அதிர்ச்சி தருகிறது.
பயர்வால் போட ஏற்பாடு
உடனடியாக அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் பயர்வால் போடுவது என அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டது. இது உத்தரவாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆபாசப் படம் பார்க்க முடியாது
பயர்வால் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் ஆபாச தளங்கள் எதையும் பார்க்க முடியாது அளவுக்கு தடுப்பு ஏற்படுத்தப்படுகிறதாம். மேலும் ஆபாசப் படங்களை டவுன்லோடு செய்வதும் தடுக்கப்படும்.