சிரியா மீது தாக்குதல் நடத்த யு.எஸ். முஸ்தீபு! நட்பு நாடுகள் நழுவுவதால் ஒபாமா அதிர்ச்சி!
சிரியாவில் புரட்சி நடத்துவோரை அதிபர் ஆசாத்தின் ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. கடந்த 21-ந் தேதி தலைநகர் டமாஸ்கஸ் அருகே ரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள் உள்பட 1,429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்தன.
இதற்காக மத்திய தரைக்கடல் பகுதியில் போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் முழு ஆதரவை தெரிவித்தன. ஆனால் நட்பு நாடான இங்கிலாந்து ஒதுங்கி கொண்டது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது,
அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கும் விதமாக பதிலடி கொடுக்க சிரியாவும் தயாராக உள்ளது.
இந்நிலையில் சிரியா மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் அளிக்கும் நகல் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிரியா மீதான தாக்குதல் நடவடிக்கை தாமதமாகக் கூடும் எனத் தெரிகிறது.