புகாரை வாபஸ் வாங்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: சகோதரர்கள் கைது!
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனந்தபுரம் மாவட்டம் முதுகுப்பா நகரைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணா. இவரது மகள் வாணி. இவர் தனது தாய் மாமா வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். தாய் மாமா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் ராகவேந்திரா அடிக்கடி மாணவி வாணியை சந்தித்து பேசி பழகி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு தனது அக்காள் மகன் பிறந்த நாள் விழாவுக்கு வரும்படி வாணியை அழைத்தார். வாணியும் ராகவேந்திராவுடன் அவனது அக்காள் வீட்டுக்கு சென்றார். பயண களைப்பு தீர அங்குள்ள குளியல் அறையில் ஆடைகளை களைந்து குளித்தார். அவர் குளிப்பதை ராகவேந்திரா ரகசியமாக தனது காமிராவில் படம் எடுத்தார்.
பின்னர் அதனை வாணியிடம் காட்டி மிரட்டினார். தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். இது குறித்து வாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் ராகவேந்திரனை பிடித்து விசாரித்தனர்.
ஆனால் நான் அப்படி செய்யவில்லை. எனது செல்போனில் எந்த ஆபாச படமும் இல்லை என்று கூறி போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். தன்னை போலீசில் மாட்டி விட்டாளே என்று வாணி மீது ஆத்திரம் கொண்டார்.
சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வாணி வீட்டுக்கு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ராகவேந்திரா, அவரது தம்பி ராமகிருஷ்ணா ஆகியோர் வாணி மீது ஆசிட் வீசி விட்டு தப்பி விட்டனர்.
இதில் வாணியின் மார்பகம், வயிறு, வலது கை, கால்களில் ஆசிட் பட்டு கருகியது. சிகிச்சைக்காக அவர் அனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவேந்திரா, அவரது தம்பி ராமகிருஷ்ணாவை கைது செய்தனர்.