‘கார்ட்டூன்’ சேனல் மாற்ற மறுத்த அண்ணன்: கோபத்தில் தற்கொலை செய்த 11 வயது தங்கை
பெங்களூர்: கார்ட்டூன் சேனல் வைக்க மறுத்த அண்ணனுடன் உண்டான சண்டையால் மனமுடைந்த 11வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் காடுகோடி சாதரமங்களாவில் வாழ்ந்து வரும் கூலித் தொழிலாளி குமாரின் 11வயது மகள் நவநீதா. அச்சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் நவநீதா தனது சகோதரன் மற்றும் பெற்றோருடன் அமர்ந்து விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை பார்த்தபோது, இது போரடிப்பதாகவும், கார்ட்டூன் சேனல் மாற்றக்கோரியும் கூறியுள்ளார் நவநீதா.
இது தொடர்பாக நவனீதாவுக்கும், அவரது சகோதரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் படுக்கையறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டுள்ளாள் நவநீதா. பெற்றோர் இது குறித்து முதலில் அசட்டையாக இருந்துள்ளனர்.
பின்னர் இரவு சுமார் பத்தரை மணியளவில் சாப்பிடுவதற்காக நவநீதாவின் அறைக்கதவைத் தட்டியுள்ளார் அவரது அம்மா ராணி. ஆனால், நெடுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமைந்த அவளது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அங்கே, நவநீதா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், நவநீதா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதைக் கேட்டு கதறி அழுதனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த காடுகோடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.