தூத்துக்குடி விமானத்தில் தீ - தேமுதிக, சரத் கட்சி எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் உயிர் தப்பினர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்த காரணத்தால் அவசரம் அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். அதில் தேமுதிக மற்றும் சரத்குமார் கட்சி எம்.எல்.ஏக்களும் இருந்தனர்.
சென்னை- தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானம் தினமும் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தூத்துக்குடி விமான நிலையத்தில் 8.35க்கு தரையிறங்கும் பின்னர் மறு மார்க்கத்தில் சென்னைக்கு காலை 9.05 மணிக்கு புறப்படும்.
செவ்வாய்க்கிழமை காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கும் போது விமானத்தில் சக்கரம் பொறுத்தப்பட்டு இருக்கும் பிஸ்டன் பகுதியில் இருந்து புகை வரத் துவங்கியது. இதனையடுத்து விமானி கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. விமானியின் துரிதமான நடவடிக்கையால் விமானம் பத்திரமாக தரையிறக்கபட்டது. இதில் பயணித்த 67 பயணிகளும் அவசரமாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வாகனம் மூலம் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானத்தில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், எர்ணாவூர் நாராயணன் ஆகிய முக்கியப் பிரமுகர்களும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்னை புறப்பட இருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் தூத்துக்குடி விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் ஆபத்து எதுவும் இன்றி தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்னை தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையப் பொறுப்பாளர் பிரபாகரன் கூறுகையில், ஓடுதளம் சிறியது என்பதால் இதுபோன்ற பிரச்னை அடிக்கடி ஏற்படுவது உண்டு. ஆனால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பையும் இது ஏற்படுத்தாது என்றார்.