கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய கட்டுப்பாடு... ஆதரவும், எதிர்ப்பும்
சென்னை: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்கள் ஜீன்ஸ், பேண்ட், டிசர்ட் அணிய விதிக்கப்பட்டுள்ள தடை திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உடை கட்டுப்பாட்டை கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி சமீபத்தில் கொண்டு வந்தார்.
'கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக் கூடாது. சாதாரண பேண்ட், சர்ட் மட்டுமே அணிய வேண்டும்' எனவும், 'மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் சிலிவ் லெஸ் உடை அணியக் கூடாது. சுடிதார் மற்றும் சேலை போன்ற உடைகள் மட்டுமே அணிய வேண்டும்' எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த உடை கட்டுப்பாடானது திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
எனினும் கோவையில் பெரும்பாலான கலை, அறிவியல் கல்லுரிகளில் உடை கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தாத நிலையில் அரசின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
மாணவர் போராட முடிவு
அரசின் இந்த உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கத்தினர், ''இந்த உத்தரவு தேவையற்றது. உடை விசயத்தில் கட்டுப்பாடு என்பது பிற்போக்குதனமானது. என்ன உடை அணிய வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளே தீர்மானிக்க வேண்டும். எனவே கல்வித்துறை உடனடியாக இந்த உத்தரவினை மறுபரீசிலனை செய்ய வேண்டும். உடைகளுக்கான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இல்லையெனில் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களில் ஈடுபடுவோம்'' என தெரிவித்துள்ளனர்.