பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் எய்ட்ஸ் நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்
மணிலா: பிலிப்பைன்ஸில் எஸ்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிலிப்பைன்ஸில் கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 449 பேருக்கு எஸ்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. 1984ம் ஆண்டு முதன்முதலாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் குறித்து தெரிய வந்த பிறகு ஒரே மாதத்தில் இத்தனை பேருக்கு அந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது தான் முதல் முறை. இந்த தகவலை பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 62 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளில் 96 சதவீதம் பேர் ஆண்கள். அவர்கள் 5 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ஆகும். அதிலும் குறிப்பாக 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் தான் அதிக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை பிலிப்பைன்ஸில் மொத்தம் 2,772 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1984ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் வரை 814 பேர் எஸ்ட்ஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.