2 வாரத்திற்குள் சென்னையில் பெட்டிக் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை நகரில் பொதுமக்களுக்கு இடையூறான வகையில வைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளளது.
இதுதொடர்பாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை நகரில் மருத்துவமனைகள் மற்றும் முக்கிய இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பெட்டிகடைகளை அகற்ற உத்தரவிடக் கோரியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், அவற்றை அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால் மாநகராட்சி அதைச் செய்யவில்லை.
இதையடுத்து இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினார் ராமசாமி. இந்த மனுவை தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ்குமார் அகர்வால்,நீதிபதிசத்தியநாராயணாஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் தாமதத்திற்கு மன்னிப்பு கோரினார். மேலும் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்குகையில், மொத்தம் உள்ள 518 கடைகளில் 339 கடைகள் அகற்றப்பட்டதாகவும், 119 கடைகள் மீதான உத்தரவு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும், மீதம் 60 கடைகள் மட்டுமே அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள் மீதம் உள்ள பெட்டிக் கடைகளை 2 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.