சேலத்தைக் கலக்கிய பெரிய கொல்லப்பட்டி மைதிலிக்கு குண்டாஸ்...!
பெரியகொல்லப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மைதிலி. 38 வயதாகும் இவர் பெரிய கைகாரி. அதாவது வீடுகளுக்குள் புகுந்து திருடுவதில் செம கில்லாடி.
குறி வைத்து வீடு புகுவது மைதிலியின் ஸ்டைலாகும். அதிலும் திறந்திருக்கும் வீடுகளுக்குள்தான் இவர் தில்லா நுழைவார். சேலம் மாவட்டத்தில் ஏகப்பட்ட திருட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார் மைதிலி. தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மைதிலி சேலம் போலீஸாரை படாதாபாடு படுத்தியுள்ளார். முன்பு ஒருமுற சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அரை நிர்வாண கோலத்தில் நின்று பெரும் அக்கப்போரை செய்தவர் இந்த மைதிலி. மைதிலியை ஒருமுறை பார்க்க அவரது தாயார் சாந்தி வந்திருந்தார். அப்போது ஹான்ஸ், பீடா, புகையிலை, பான்பராக் போன்றவற்றைக் கொண்டு வந்து கொடுத்தார். இதை சிறைக் காவலர்கள் பார்த்து விட்டனர்.
இதையடுத்து சாந்தி கைது செய்யப்ப்டடார். இந்த நிலையில், ராசிபுரம் கோர்ட்டுக்கு மைதிலியைக் கொண்டு செல்ல போலீஸார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது சிறைக்கு வெளியே நின்று கொண்ட மைதிலி, தனது சேலையைக் கழற்றி ஜாக்கெட், உள் பாவாடையுடன் நின்று கொண்டு, சத்தம் போட ஆரம்பித்தார்.
சிறைக்குள் பெண் கைதிகளை சித்ரவதை செய்கின்றனர். பார்வையாளர்களிடம் லஞ்சமாக பணம் வாங்குகின்றனர். கேள்வி கேட்கும் கைதிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போட்ட சத்தத்தால் கூட்டம் கூடி விட்டது. ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். பின்னர் போலீஸார் அவரை சமாதானப்படுத்தி கூட்டிச் சென்றனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியுள்ளார் மைதிலி. இவரது தம்பி முத்து என்பவரும் திருட்டு வழக்குகளில் தொடர்பு உடையவர். இவர் மீது சேலம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. கோர்ட் விசாரணைக்கு இவர் ஆஜராகாததால் இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டு இருந்தார்.
இதனால் இவரை போலீசார் தேடிவந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் மைதிலியின் வீட்டிற்கு சென்று முத்து உள்ளாரா என போலீசார் விசாரித்து வந்தனர். இதை அறிந்த மைதிலி ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில், நேற்று இவர் சேலம் எண் 4 மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டு வளாகத்தில் அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்போது அங்கு சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு ரவி வந்தார்.
ரவியைப் பார்த்ததும் ஆத்திரத்துடன், படு ஆபாசமாக அவரைத் திட்டித் தீர்த்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அருகில் இருந்த போலீஸார் அமைதிப்படுத்தினர். ஆனாலும் விடாத மைதிலி, என் வீட்டுக்கு யாராவது மறுபடியும் போனீங்கன்னா அத்தனை பேரையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் ஏட்டு ரவி தனக்கு மைதிலி கொலை மிரட்டல் விடுத்ததாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மைதிலி மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனராம்.