கலிபோர்னியாவில் அதிகரித்து வரும் இந்திய வம்சாவளி நீதிபதிகள்
கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வசிப்பவர் இந்திய-அமெரிக்கரான சுனில் ஆர். குல்கர்னி(41). அவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் கலிபோர்னியா பல்கலைக்கழக வழக்கு குழுவில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் சான்டா கிளாரா கவுன்ட்டி சுப்பீரியர் நீதிமன்றத்தின் நீதிபதியாக சுனில் நியமிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா ஆளுநர் ஜெர்ரி பிரவுன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2010ல் வடக்கு கலிபோர்னியாவில் இந்திய-அமெரிக்கரான பால் சிங் க்ரேவால் மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனில் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்து கலிபோர்னியாவில் உள்ள கிங் சிட்டியில் வளர்ந்தவர். அவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டிங்ஸ் காலேஜ் ஆப் தி லாவில் சட்டம் பயின்றார். அவர் 1996ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை கலிபோர்னியாவின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஆலிவர் டபுள்யூ வேக்னரிடம் சட்ட கிளார்க்காக பணியாற்றினார். அதன் பிறகு அவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.
கலிபோர்னியா நீதிமன்றங்களில் இந்திய அமெரிக்கர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. முன்னதாக ரூபா எஸ் கோஸ்வாமி, அல்கா சாகர், வின்ஸ் கிர்தாரி சப்ரியா ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.