மூட நம்பிக்கையை ஒழிக்க உரிய சட்டம் தேவை: கருணாநிதி கோரிக்கை
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மஹராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. நரபலி, பில்லி, சூனியம், மாந்திரீகம் மற்றும் இதர மனித நேயமற்ற கொடுமையான பழக்கங்களுக்கு எதிராக, அச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இச்சட்டத்தின்படி மோசடி செயல்களில் ஈடுபடுவோர் கைதானால், குற்றம் நிரூபிக்கப்படும்போது, ஏழாண்டு தண்டனை கிடைக்கும்.
மகராஷ்டிர மாநிலத்தில் புகழ் பெற்ற பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவரது படுகொலை சம்பவம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என, உணர்த்தியிருக்கிறது.
மூட நம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை, மத்திய அரசும், மாநில அரசும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம், பள்ளி, கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும். அக்கோரிக்கையை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முனைப்போடு, முன்னெடுத்துச் செல்வோம்.
அதுவே நரேந்திர தபோல்கர் நினைவுக்கு, நாம் செலுத்திடும் வீர வணக்கம் இவ்வாறு, கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.