ரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க தயார்: சிரியா
மாஸ்கோ/டமாஸ்கஸ்: ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று ரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து அவற்றை அழிக்க சிரியா ஒப்புதல் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி 1400 பேரை படுகொலை செய்தது சிரியா என்கிறது அமெரிக்கா. இந்த ரசாயன ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றால் பேரழிவு ஏற்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இதனாலேயே சிரியா மீது ராணுவ நடவடிக்கை அவசியம் என்று அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது.
ரஷ்யாவில் சிரியா அமைச்சர்
இந்நிலையில் சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல்-மோவுலிம் நேற்று மாஸ்கோவுக்கு சென்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேயி லாவ்ரோவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்வோம்
சிரியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க ரஷ்யா வலியுறுத்தியது. இதை ஏற்றுக் கொண்ட சிரியா அமைச்சர் வாலித், சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். ஆனால் இதற்கு காலக்கெடு எதுவும் தர முடியாது. இது தொடர்பாக ஜெனிவா மாநாட்டில் பங்கேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சியுடனும் பேச தயார். ஆனால் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தினால் எங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்வோம் என்றார்.
ரஷ்யா, சீனா எதிர்ப்பு
மேலும் சிரியா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யாவும் சீனாவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரியுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதை வலியுறுத்தினார்.
அரபு லீக் அமைச்சர்களுடன் யு.எஸ். ஆலோசனை
இதனிடையே பாரிஸில் அரபு லீக் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி சந்தித்துப் பேசியிருந்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெர்ரி, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அரபு லீக் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.
ரசாயன தாக்குதல் இல்லை- ஆசாத்
இந்நிலையில் சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், என் நாட்டு மக்களுக்கு எதிராக நான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கு ஆதாரம் கிடையாது. அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.