வட தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை! இன்றும் மழை நீடிக்கும்!! ஒருவர் பலி!!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சென்னை உட்பட வட தமிழகத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழை இன்றும் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து திருத்தணியில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதால் கடந்த 2 நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் விடிய விடிய மழை..
சென்னையில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பட்டினப்பாக்கம் அண்ணாநகர், ராயப்பேட்டை, மைலாப்பூர், மந்தைவெளி, தாம்பரம், வேளச்சேரி ஆகிய இடங்களில் நள்ளிரவில் இடி மின்னலுடன் தொடங்கிய மழை விடியும் வரை நீடித்தது.
பொதுமக்கள் தத்தளிப்பு
சென்னை சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுவதால் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. இதனால் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சென்ட்ரல், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
இதர மாவட்டங்களில்..
இதேபோல் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளிலும், திருச்சி லால்குடி, துவாக்குடி சமயபுரம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இன்றும் மழைக்கான வாய்ப்பு
இந்நிலையில் இன்றும் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழையோ அல்லது கன மழையோ பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மழைக்கு ஒருவர் பலி
கன மழை காரணமாக திருத்தணி அருகே தாழமேடு என்ற கிராமத்தில் வீட்டு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். முன்னதாக இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை மனைவியின் தாய் வீட்டிற்கு அனுப்பியதால் அவர்கள் உயிர் தப்பினர்.
குன்னூரில் நூற்றாண்டு கற்பூர மரம் பிளந்தது!
குன்னூர் அருகில் உள்ள எடப்பள்ளி பகுதியில் செவ்வாய்க் கிழமை திடீரென்று பலத்த இடிவிழுந்ததில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கற்பூர மரம் இரண்டாகப் பிளவுபட்டது. மரத்தில் இருந்த கிளைகள் மற்றும் பட்டைகள் சுமார் 50 அடி தூரம் வரை சிதறிக் கிடந்தன. இந்த மரத்தடியில் வழக்கமாக தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் இளைப்பாறுவதும் மாடுகளை மேய்ப்பதும் வழக்கம்.