இந்த மழைக்கே நாறி விட்டதே சென்னை... மழைக்காலத்தில் என்னாகப் போகிறதோ...???
சென்னை: இது சென்னைக்கு இயல்பான மழை அல்ல.. திடீரென வந்த மழைதான். இத்தனைக்கும் மிகப் பெரிய அளவிலும் மழை பெய்யவில்லை. ஆனாலும் சென்னையும், அதன் புறநகர்ப் பகுதிகளும் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போயுள்ளன.
எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. குறிப்பாக புறநகர்ப் பகுதிகள் பல மழை வெள்ளத்தால் தீவுகள் போல மாறியுள்ளன.
பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தெருக்களில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. முறையான கால்வாய் வசதி பல இடங்களில் இல்லாததால் வந்த வினை இது.
பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை...
சென்னை நகரில் மட்டும் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சாக்கடை நீரும் மிக்ஸ் ஆகி...
மழை நீருடன் கழிவு நீர், சாக்கடை நீர் ஆகியவையும் கலந்து மக்களை பெரும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளன.
பாதாள சாக்கடைகளில் அடைப்பு
நகரின் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பல்வேறு நோய்கள் பரவும அபாயம் ஏற்பட்டுள்ளது.
மரங்கள் விழுந்து...
மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகில், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு என 20க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
வாய்ககால் இல்லை வடிகால் இல்லை..
மழை நீர் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாததாலும், அமைக்கப்பட்ட பகுதிகளில் முறையான பராமரிப்பு இல்லாதாதலும், மழை நீர் வாய்க்கால்களில் போக வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து மக்களை அவஸ்தைக்குள்ளாக்கியுள்ளது.
பாவப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம்
குறிப்பாக தென் சென்னையின் வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர் பகுதிகள் எப்போது மழை பெய்தாலும் உடனே மிதக்க ஆரம்பித்து விடும். காரணம் டாஸ்மாக் கடைகள் அல்ல... மாறாக மழை நீர் வழி்ந்தோடுவதற்கு முறையான வசதிகள் இல்லாததாலும், தாழ்வான பகுதிகளாக இருப்பதாலும்.
எப்பப்பா விடிவு வரும்
இந்தப் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் தடுக்க கோடிக்கணக்கில் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுமேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்னும் விடிவுதான் பிறக்கவில்லை.
கரையோரம்தான் பெரும்பாலான மக்கள்
சென்னையைப் பொறுத்த அளவில் அதன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர், நீராதாரங்கள் வழங்கும் ஏரிகள், ஆறுகளின் கரைகளில்தான் வசிக்கிறார்கள். இதனால் மழையால் இவர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எந்த மழை வந்தாலும் இவர்கள்தான் முதலில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பதால் இவர்களின் ஆக்கிரமிப்பால் பிற சென்னைவாசிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
திட்டமிட்ட நடவடிக்கை தேவை
இந்த அவல நிலை இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. சென்னை நகரின் பெருக்கத்தையும், விஸ்தரிப்பையும் மனதில் கொண்டு திட்டமிட்ட நீண்ட கால திட்டங்களை தீட்டி போர்க்கால அடிப்படையில் அவற்றை செயல்படுத்த வேண்டியது அவசியம்.
இந்தசாதாரண மழைக்கே சென்னை நாறிப் போய் விட்டது. அடுத்த மாதம் வட கிழக்குப் பருவ மழை தொடங்கப் போகிறது, அடுத்தடுத்து புயல்கள் வரப் போகின்றன. அப்போது இன்னும் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க வேண்டி வருமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.