கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தனியார் பள்ளியை சூறையாடிய மேலும் 4 பேர் கைது...15 நாட்கள் சிறை
கள்ளக்குறிச்சி : கணியாமூர் தனியார் பள்ளியில் கலவரத்தை தூண்டியதாக வாட்ஸ் ஆப் குழு அட்மின்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 12ம் தேதி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பள்ளி தரப்பில் கூறப்படுகிறது.
எனினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றையிட்டு பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.
கடந்த ஜூலை 17 ஆம் தேதி அன்று பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வாகனங்கள், பள்ளியில் இருந்த சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. மேலும், கலவரக்காரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதோடு, அவர்களின் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ ஆதாரங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் கைது செய்து வருகின்றனர். வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு ஆள் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' குழு உருவாக்கி நுாற்றுக்கும் மேற்பட்டோரை இணைத்த, கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்தைச் சேர்ந்த கொளஞ்சிமணி மகன் விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த துருவூரைச் சேர்ந்த ஏழுமலை மகன் துரைபாண்டி ஆகிய 2 அட்மின்களை போலீசார் கைது செய்தனர்.
வன்மத்தைத் துாண்டும் வகையில் 'வாட்ஸ் ஆப்' குழுவில் கருத்து பதிவிட்ட எறஞ்சி அடுத்த காச்சக்குடியைச் சேர்ந்த குமரவேல் மகன் அய்யனார் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது கல்வீசி தாக்கிய புதுபல்லகச்சேரியைச் சேர்ந்த முருகன் மகன் பரமேஸ்வரன், ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். குற்றவாளிகள் நான்கு பேரையும், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.