"சாகும் தருவாயில் குழந்தை பொய் சொல்லாது.. முதல்வர் மவுனம் காப்பது ஏன்?" பாஜக நால்வர் குழு கேள்வி
தஞ்சை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினரிடம் பாஜக தனிக்குழு விசாரணை நடத்தியது.
அரியலூர் வடுகர் பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் படித்து வந்தார்.
இவர் கடந்த ஜன.9ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், சிகிச்சைக்காக அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,

மாணவி உயிரிழப்பு
இந்தச் சூழலில் மாணவியைப் பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியாக புகார்கள் எழுந்தன. மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

பாஜக விசாரணைக்குழு
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பில் தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. சந்தியா ராய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பாஜகவின் இந்த விசாரணைக் குழுவில் நடிகையும் தெலங்கானா முன்னாள் எம்பியுமான விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ரா, கர்நாடகத்தைச் சேர்ந்த கீதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர், இன்றைய தினம் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முதல்வர் அமைதி
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த விசாரணை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான விஜயசாந்தி, "மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை விவகாரத்தில் முதல்வர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம்? யாரைக் காப்பாற்ற முயல்கிறார். மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

சாகும் தருவாயில் குழந்தை பொய் சொல்லாது..
மேலும் மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விசாரணை அறிக்கையைத் தமிழக ஆளுநர் மற்றும் கட்சியின் தேசிய தலைவர் நட்டாவிடம் சமர்ப்பிக்க உள்ளோம். சாகும் தருவாயில் எந்த குழந்தையும் பொய் சொல்லாது... ஏன் அந்த குழந்தையின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்
இதையெல்லாம் விடக் கொடுமை இறந்த பள்ளி குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவியது. கைது செய்யப்பட்ட சகாயமேரி புகைப்படங்களை ஏன்? ஊடகங்கள் வெளியிடவில்லை, மேலும் ராங்கிள் மேரி மீது இதுவரை இல்லை. இந்த விவகாரத்தை பாஜக எந்த நிலையிலும் விடாது. இதை இப்படியே விட்டால் நாளை தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் மதமாற்றம் கட்டாயம் நடைபெறும் எனவே கட்டாய மத மாற்றத் தடை சட்டம் தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications