பெங்களூரில் ஷாக்.. நீச்சல் குளத்தில் தவறி விழுந்த சிறுமி பலி! அப்பார்ட்மென்ட்களில் பரவும் அச்சம்
பெங்களூர்: பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் 10 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வர்தூர்-குஞ்சூர் சாலையில் உள்ள பிரஸ்டீஜ் லேக்சைட் ஹாபிடேட் அடுக்குமாடி குடியிருப்பு, நேற்று முன்தினம் இரவு வழக்கமான அமைதியுடன் இருந்தது. சிறுவர்கள் சிலர் ஆங்காங்கே விளையாடிக்கொண்டிருந்தனர். இரவு 8 மணி இருக்கும். அப்பார்ட்மென்ட்டின் நீச்சல் குளம் அருகே இருந்து கூச்சல் சத்தம் எழுந்திருக்கிறது. சில நிமிடங்கள் கழித்துதான் பெரியர்கள் சிலர் நீச்சல் குளம் அருகே வந்திருக்கின்றனர். அப்போது அவர்கள் பார்த்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது குளத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்து சடலமாக மிதந்துகொண்டிருந்திருக்கிறார். இது தொடர்பாக வர்தூர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், "வியாழக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் சிறுவர்களின் ஒரு குழு நீச்சல் குளத்திற்கு அருகே திருடன், போலீஸ் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 10 வயது சிறுமி மன்யா டமர்லா திடீரென நீச்சல் குளத்தில் தவறி விழுந்திருக்கிறார்.
உடனே சிறுவர்கள் அலறி சத்தம்போட, பெற்றோர்கள் வந்து பார்ப்பதற்குள் டமர்லா உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குளத்தின் அருகே ஏன், பாதுகாவலர்கள் இல்லை? குழந்தைகள் ஏன் குளத்திற்கு அருகே விளையாட அனுமதிக்கப்பட்டனர் என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன" என கூறியுள்ளனர்.
ஆனால் இந்த விஷயத்தில் டமர்லாவின் பெற்றோர்கள் மற்றொரு தீவிரமான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். அதாவது, "நீச்சல் குளத்தில் மின்சார கசிவு ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் இந்த உயிரிழப்பு நடந்திருக்கிறது. இது தொடர்பாக சிலர் ஏற்கெனவே அப்பார்ட்மென்ட் பராமரிப்பாளர்களிடம் புகார் அளித்திருக்கின்றனர். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான் எனது மகள் உயிரிழந்திருக்கிறார்.
என் மகள் ஒரு பிரகாசமான குழந்தை, அவளுக்கு இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அவள் திரும்பி வரமாட்டாள், ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு நிறைய பெற்றோர்கள் கவலையுடன் இருப்பதை நான் காண்கிறேன். அந்த பெற்றோர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் சார்பாக நான் பேசுகிறேன். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்" என்று டமர்லாவின் தந்தை ராஜேஷ் கூறியுள்ளார்.
10 வயது சிறுமி ஒருவர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெங்களூர் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரஸ்டீஜ் லேக்சைட் ஹாபிடேட் அப்பார்ட்மென்டில் இந்த உயிரிழப்புக்கு பின்னர், பலரும் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்க மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications