ரூ.176 கோடி வரி மோசடி.. நாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற சென்னை நபர் பெங்களூரில் கைது
பெங்களூர்: ஏழை மக்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலியாக கம்பெனிகளை உருவாக்கி வரி மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு ரூ. 176 கோடி இழப்பு ஏற்படுத்திய கும்பலின் மூளையாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த நபரை ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் வரி ஏய்ப்பு மற்றும் மோசடியை கண்காணிக்கும் அமைப்பாக சட்ட அமலாக்க நிறுவனமான ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பிரிவு, வரி மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வப்போது, இத்தகைய மோசடியில் ஈடுபடும் நபர்களை கையும் களவுமாக பிடித்து உரிய நடவடிக்கைகளை ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வரி மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு ரூ.176 கோடி வரை இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய சென்னையை சேர்ந்த நபர் வெளிநாட்டிற்கு தப்பி ஓட முயன்ற போது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜி.எஸ்.டி நுண்ணறிவு (சென்னை மண்டல பிரிவு) இயக்குனரகத்தின் அதிகாரிகள் கூறியதாவது:-
வங்கி லோன் வாங்கி தருவதாக கூறி அப்பாவி ஏழை மக்களின் ஆதார், பான் விவரங்களை பெற்று அவர்களது பெயரில் போலி நிறுவனங்களை உருவாக்கி அதில் போலி ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக சென்னையில் வசித்து வந்த 34-வயது நபர் இருந்துள்ளார். வரி மோசடியால் அரசுக்கு ரூ.175.88 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளார். இவருக்கு உடந்தையாக செயல்பட்ட நபர் கடந்த மாதம் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் சென்னையில் வசிக்கும் 34-வயது நபர்தான் இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அதற்கு மறுநாளே வரி மோசடிக்கு மூளையாக செயல்பட்ட 34-வயது நபர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டிற்கு தப்பி ஓட முயன்ற போது அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-
மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மிகவும் கவனமாக வெளிநாட்டு சிம்கார்டுகள், பிரத்யேக போன்கள் உள்ளிட்டவற்றை கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், ஐபி முகவரி மூலமாகவும் வாட்ஸ் அப் சாட்களையும் வைத்து நுண்ணறிவு பிரிவு மோசடியை கண்டறிந்தது. மேலும் மோசடியில் ஈடுபடும் நபர்களை பிடிக்க பல்வேறு இடங்களில் சோதனையும் நடைபெற்றது. 25 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு, 20 ஜி.எஸ்.டி பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செல்போன்கள், மோடம்கள், லேப்டாப், சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications