லேசான நிலநடுக்கம்.. பரபரப்பான காலையில் சட்டென அதிர்ந்த பெங்களூரு.. வீதிகளுக்கு ஓடோடி வந்த மக்கள்!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கர்நாடக தலைநகர் பெங்களுரு நில நடுக்கத்தால் சட்டென அதிர்ந்ததால் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பெங்களூரில் ஏற்பட்ட சிறிய அளவிலான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இதேபோல் அந்த மாநிலத்தின் சிக்கபல்லபுரா மாவட்டத்திலும் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 2.9 புள்ளிகள் மற்றும் 3 புள்ளிகளாக பதிவானதாக க தேசிய நில அதிர்வு மையம் (என்எஸ்சி) தெரிவித்துள்ளது.

23 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. சிக்கபல்லபுரா மாவட்டம் பெங்களூருவின் வடகிழக்கில் சுமார் 63 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. வீடுகளில் உள்ள பொருட்கள் உருண்டோடின. இதனால் பீதி அடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
லேசான நிலநடுக்கம் என்பதால் நல்லவேளையாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை. பெங்களுருவில் நில அதிர்வு ஏற்பட்ட தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது. கர்நாடக மாநிலத்தில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி உள்ளிட்ட கிராம பகுதிகளில் அடுத்தடுத்து என மொத்தமாக 5 முறை நில அதிர்வு ஏற்பட்டது. அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். புவியியலாளர் குழு அங்கு விரைந்து சென்று ஏற்கனவே ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications