"உறுப்பை நசுக்கி".. காதலனை "டார்ச்சர்" செய்து கொன்ற காதலியின் அப்பா.. காரணத்தை கேட்டு கர்நாடகா ஷாக்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தனது மகள் காதலித்ததை அறிந்த தந்தை 17 வயது மகளையும், மகளின் காதலனையும் கொடூரமான முறையில் படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் பெண்கள் மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் நிலையில், தென்னிந்தியாவில் ஆணவ படுகொலை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது கர்நாடக மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது இது தொடர்பாக சிறுமியின் தந்தை உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆணவக்கொலை
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பெவின்மட்டி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னர் 17 வயது சிறுமி ஒருவர் காணாமல் போய்விட்டதாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதேபோல 22 வயது இளைஞனும் காணவில்லையென புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சிறுமி குருபா சமூகத்தை சேர்ந்தவராவார். இளைஞன் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவராவார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

காதல்
இந்நிலையில் சிறுமியின் உறவினர் ரவி ஹுல்லன்னவர் என்பவரை காவல்துறை விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சிறுமியும் 22 வயதான விஸ்வநாத் நெலகி என்கிற இளைஞனும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் யார் வீட்டிற்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் எப்படியோ சிறுமியின் தந்தைக்கு இந்த விஷயம் போயுள்ளது.

பழிவாங்கும் உணர்வு
சிறுமியை அழைத்து அவர் கண்டித்துள்ளார். இதனையடுத்து 18 வயது நிரம்பியவுடன் பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காதலர்கள் இருவரும் முடிவெடுத்துள்ளனர். இந்த விஷயமும் சிறுமியின் தந்தையின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இதற்கிடையில் நெலகியை சந்திக்க சிறுமி சென்றிருக்கிறார். இது சிறுமியின் தந்தைக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருக்கும் நிலையில் இவ்வாறு சர்ச்சைகள் மேலெழுவது இயல்பானதாக இருந்த நிலையில், சர்ச்சை பழிவாங்கும் உணர்வாக மாறியிருக்கிறது.

கொலை
இந்நிலையில் தனது மகளை அழைத்த சிறுமியின் தந்தை பரசப்பா காரடி இருவரும் வீட்டிற்கு வரவேண்டும் என்றும், இருவரிடமும் பேச வேண்டும் எனவும் கோரியுள்ளார். பின்னர் அவர்களை அழைத்துவர 5 உறவினர்களை அனுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இவர்களை அழைக்கச் சென்ற உறவினர்கள் அழைத்து வருகையில் பாதி வழியில் வைத்து நெலகியை கொடூரமாக தாக்கியுள்ளனர். நெலகியின் ஆணுறுப்பு விரைப்பைகள் நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் சிறுமியை துப்பட்டாவால் சுற்றி கொலை செய்துள்ளனர். இருவரின் உடலையும் கிருஷ்ணா நதியில் வீசியுள்ளனர். தற்போது வரை உடல்கள் தேடப்பட்டு வருகின்றன என காவல்துறை கூறியுள்ளது. கடந்த 1ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் தற்போதுதான் உண்மைகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications