‛‛டெட்லைன்’’ நவம்பர் வரை தான்..ராஜினாமா செய்யும் காங்கிரஸ் தலைவர்கள்.. கொளுத்திப்போட்ட சி.டி. ரவி
பெங்களூர்: ‛‛காங்கிரஸ் கட்சியின் ‛பாரத் ஜோடோ' யாத்திரை தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நவம்பர் மாதத்துக்கு பிறகு ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய உள்ளனர்'' என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடிரவி கூறியுள்ளார்.
இந்தியாவில் வடமாநிலங்களில் பல இடங்களில் பாஜக செல்வாக்கு நிறைந்து காணப்படுகிறது. ஆனால் தென்இந்திய மாநிலங்களில் அந்தளவுக்கு பாஜகவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. கர்நாடகத்தில் மட்டும் தான் பாஜக ஆட்சியில் உள்ளது.
பிற மாநிலங்களில் மாநில கட்சிகள் தான் ஆட்சியில் உள்ளன. பாஜகவும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் தான் பாஜக ‛ஆபரேஷன் சவுத்' என்ற பெயரில் தென்இந்திய மாநிலங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
தம்பி என வாழ்த்திய சிடிரவி! அண்ணா என நன்றி கூறிய மத்தியமைச்சர் எல் முருகன்! ஒரே பூரிப்பு.. என்னாச்சு
அடுத்த ஆண்டு தேர்தல்
குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. அதேபோல் தெலுங்கானாவிலும் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரம் வகையில் பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இது சிரமம் எனினும் அதற்கான பணியை பாஜக கையில் எடுத்து வருகிறது.
சிடி ரவி பேச்சு
இந்நிலையில் தான் பாஜகவின் ‛ஆபரேஷன் சவுத்' தொடர்பாக சில முக்கிய விஷயங்களை கர்நாடக மாநில எம்எல்ஏவும், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளருமான சிடி ரவி கூறியுள்ளார். இவர் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் சிடிரவி கூறியுள்ளதாவது:
காங்கிரஸில் ஆள் இல்லாத நிலை
இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி யாத்திரை நடத்த உள்ளது. முதலில் காங்கிரஸ் தனது கட்சி தனது தலைவர்களை ஒருங்கிணைக்க யாத்திரை நடத்த வேண்டும். இது தான் தற்போது அந்த கட்சிக்கு தேவையாக உள்ளது. இல்லாவிட்டால் கட்சியின் போர்டு வைக்க கூட காங்கிரஸில் ஆள் இல்லாத நிலை ஏற்படும். காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை என்பது தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த யாத்திரை மற்றும் காங்கிரஸை பார்த்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு நிலையான கொள்கை, தலைமை தேவையாக உள்ளது. இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வந்தால் பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள். நவம்பர் மாதத்துக்கு பிறகு கர்நாடகத்திலும் பல காங்கிரஸ் தலைவர்கள் அந்த கட்சியை விட்டு வெளியேறுவார்கள்.
பாஜகவில் நிலையான தலைவர்
கர்நாடகத்தில் பாஜக தலைவர் மாற்றம் என்பது இப்போதைக்கு இல்லை. பாஜக என்பது பரம்பரை கட்சி அல்ல. இங்கு தலைவர் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதில் முறையாக பாஜக தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எங்கள் கட்சியில் நிலையான கொள்கை, தலைமை உள்ளது. கர்நாடகத்தில் எடியூரப்பா என்பவர் பாஜக வளர்த்த தலைவர். அதேபோல் கர்நாடகத்தில் பாஜகவை வளர்த்த தலைவர் தான் எடியூரப்பா. எடியூரப்பாவை யாராலும் கட்டிப்போட முடியாது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வழிக்காட்டுதலின் படி கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மையில் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கிறோம்'' என்றார்.