அம்னெஸ்டி தலைவர் ஆகார் பட்டேல் பெங்களூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்.. அமெரிக்கா செல்ல தடை
பெங்களூர்: மனித உரிமை செயற்பாட்டாளரான ஆகார் படேல் அமெரிக்கா புறப்பட்ட நிலையில் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா எனும் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஆகார் படேல். மனித உரிமை செயற்பாட்டாளரான இவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார்.
இந்தியாவில் பொதுமக்கள் மீதான தாக்குதல், தனது புத்தகங்கள் தொடர்பான அனுபவங்களை மிச்சிகன், பெர்க்லி மற்றும் நியூயார்க் பல்கலைக்கழங்களில் எடுத்துரைக்க இந்த பயணத்தை அவர் மேற்கொள்ள இருந்தார்.

தடுத்து நிறுத்தம்
இதனால் இன்று ஆகார் படேல் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவருக்கு எதிராக சிபிஐ சார்பில் லுக் அவுட் சர்குலர் (Look Out Circular) நிலுவையில் இருப்பதாக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் விமான நிலையத்தில் இருந்து திரும்பினார்.

டுவிட்டரில் தகவல்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றாலும் சிபிஐயின் கட்டுப்படுத்தப்பட்ட நபர்களின் பட்டியலில் பெயர் இருப்பதாக குடியுரிமை அதிகாரிகள் விமான பயணம் மேற்கொள்ள அனுமதி மறுத்தனர். அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்த வழக்கின் காரணமாக நான் சிபிஐயின் லுக்-அவுட் சர்குலரில் இருக்கிறேன். இதற்கான காரணம் என்ன" என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த ட்விட்டர் பதிவில் அவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்துள்ளார்.

சட்ட நடவடிக்கை
மேலும் அவர் கூறுகையில் ‛‛எனக்கு எதிராக ஒரு லுக் அவுட் சர்க்குலர் இருப்பது பற்றி எனக்கு தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி எனக்கு முறைப்படி தெரிவித்து இருக்க வேண்டும். இதை சட்டபூர்வமாக எதிர்கொள்வது குறித்து ஆராய்ந்து வருகிறேன். நாட்டில் பொதுமக்கள் எவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை மீண்டும் மத்திய அரசு நிரூபித்துள்ளது. பத்திரிகையாளர் ராணா அய்யூப் இதேபோல் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது என்னை தடுத்துள்ளனர். இந்த வழக்கில் எனது சட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறேன் " என்றார்.

முன்கதை என்ன
முன்னதாக ஆகார் படேல் தலைவராக உள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா எனும் அமைப்பின் மீது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (எப்சிஆர்ஏ) மீறி முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக 2019ம் ஆண்டில் பெங்களூர், டெல்லியில் உள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா, இந்தியன்ஸ் பார் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் டிரஸ்ட் ஆகியவற்றின் வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. 2020 செப்டம்பரில் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. இதையடுத்து இந்த அமைப்பு தனது செயல்பாட்டை நிறுத்தியது.

பாஸ்போர்ட் முடக்கம் ஏன்
மேலும் குஜராத் சூரத் பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஆகார் படேலின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இந்த பயணத்துக்காக ஆகார் படேல் நீதிமன்றத்தை அணுகி பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றார். இந்நிலையில் தான் அவரது பயணத்துக்கு சிபிஐ சார்பில் வழங்கப்பட்ட லுக்அவுட் சர்க்குலர் இடையூறாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications