10 ஆண்டுக்கு பின் குழந்தை.. கொடுக்க தாய்ப்பால் இல்லை.. 20வது மாடியிலிருந்து குதித்த பெண்.. பரிதாபம்
பெங்களூர்: திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லாததால் விரக்தி அடைந்த பெண் ஒருவர், 20-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு அதற்கு மாற்றான சத்து பானங்கள் இருக்கின்றன. அப்படியே இல்லாவிட்டாலும் தாய்ப்பால் வங்கிகளும் ஏராளமாக இருக்கின்றன. இதுபோன்ற வசதிகள் இருக்கும் நிலையிலும், இந்த அற்ப காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்வதை என்னவென்று சொல்வது?
தாய்ப்பால் இல்லாத கவலையில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சூழலில், இப்போது தாயே இல்லாமல் அல்லவா அந்த பிஞ்சுக் குழந்தை தவிக்கப் போகிறது.
ஒரு ஆண் குழந்தை இல்லையே.. 4 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு தந்தை தற்கொலை.. கர்நாடகாவில் பரிதாபம்
10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கரீஷ்மா சிங் (40). இவர் கனடா அரசின் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட ஐடி ஊழியர் ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எனினும், இந்த தம்பதியருக்கு பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. குழந்தைக்காக பல லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சைகளை செய்துகொண்டும் கரீஷ்மா சிங்குக்கு கரு தங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கரீஷ்மா சிங் கர்ப்பமானார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம் தரித்ததால் கரீஷ்மா சிங்கும், அவரது கணவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தாய்ப்பால் இல்லாததால் விரக்தி
இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை அவருக்கு பிறந்தது. எனினும், கரீஷ்மாவின் மகிழ்ச்சி நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஏனெனில், கரீஷ்மாவுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்ற மனவேதனையில் துடித்தார் கரீஷ்மா. நாளாக நாளாக, அவருக்கு இதை நினைத்து அதிக கவலைப்ட தொடங்கினார். இதனால் ஒருகட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான கரீஷ்மா, கடந்த ஜூன் மாதம் கனடாவில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால், அப்போது அவரது கணவர், கரீஷ்மாவை காப்பாற்றிவிட்டார்.
இந்தியா திரும்பினார்
இந்த தகவல் தெரியவரவே, கரீஷ்மாவை அவரது பெற்றோரும், சகோதரர்களும் இந்தியா அழைத்து வந்தனர். மேலும், கரீஷ்மாவின் மூத்த சகோதரர் கவுதம் சிங், தான் பெங்களூரின் மல்லசாண்ட்ரா பகுதியில் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிலேயே தங்கையை தங்க வைத்தார். இந்த சூழலில், கடந்த அக்டோபர் மாதமும் கரீஷ்மா தற்கொலைக்கு முயல, அவரது சகோதரர் அவரை காப்பாற்றியுள்ளார்.
20-வது மாடியில் இருந்து..
இந்நிலையில், தனக்கு தாய்ப்பால் இல்லை என்ற மன உளைச்சலில் இருந்த கரீஷ்மா, நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது, அவரது சகோதரர் எங்கு செல்கிறாய் எனக் கேட்க, கூந்தலை உலர வைப்பதாக கூறி சென்றார். ஆனால், மொட்டை மாடிக்கு சென்ற அவர் 20-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி கரீஷ்மா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.