பலருக்கும் ஆபத்து.. பெங்களூருவில் மகனுக்கு கொரோனா இருப்பதை மறைத்த பெண் ரயில்வே அதிகாரி.. சஸ்பெண்ட்
பெங்களூரு: ஊருக்குள் தெரிந்தால் குடும்பத்திற்கு பிரச்சனை வரும் என நினைத்து மகனுக்கு கொரோனா வைரஸ் இருப்பதை மறைத்த பெங்களூரு பெண் ரயில்வே அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த காரியத்தால் பெங்களூருவில் பலருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
Recommended Video
பெங்களூரு மெயின் ரயில் நிலையத்தில் உதவி பணியாளர் அதிகாரியாக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது 25 வயது மகன் ஸ்பெயினில் இருந்து மார்ச் 13ம் தேதி திரும்பி வந்துள்ளார்.
அவர் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் கொரோனா அறிகுறி இருந்ததால் அவரை வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
கொரோனாவை மறைத்தார்
இதையடுத்து வீட்டுக்கு வந்த மகனை அந்த ரயில்வே அதிகாரி பெங்களூரு மெயின் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே காலனியில் விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து தங்க வைத்து தனிமைப்படுத்தி உள்ளார். ஆனால் அங்கு அவர் பலருடன் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதற்கிடையே அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது ஐந்து நாட்களுக்கு பின் நடத்தப்பட்ட சோதனையில் உறுதியானது.
ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி
இதனிடையே விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்ட ரயில்வே அதிகாரி மகனுக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்து தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து மகனுக்கு கொரோனா வைரஸ் இருப்பதை மறைத்த பெண் ரயில்வே அதிகாரியையும் தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
பயண விவரம் மறைப்பு
இது தொடர்பாக தென்மேற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில். பெங்களூரு ரயில் நிலையத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி தனது 25வயது மகன் கொரானாவால் மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டில் இருந்து திரும்பி வந்ததை மறைத்துள்ளார். அவர் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில்வே காலனியின் விருந்தினர் மாளிகையில் உள்ள ஒரு அறையை மகனுக்காக பதிவு செய்து தனியாக தங்க வைத்துள்ளார்.
பிரச்சனை வரும்
அங்கு அவரது மகன் பலரையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதன் மூலம் அவர் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவித்துள்ளார். ஊருக்குள் தெரிந்தால் குடும்பத்திற்கு பிரச்னை வரும் என நினைத்து கொரோனா வைரஸ் பாதிப்பை மறைத்துள்ளார். இதன் மூலம் நம் அனைவருக்குமே ஆபத்தை உருவாக்கி உள்ளார் என்று அதிர்ச்சி தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
பெங்களூரு பெண் அதிகாரியின் மகன், அவர் யார் யாருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டாரா அத்தனை பேரையும் தேடி கண்டுபிடித்து அவர்களை பெங்களூருவில் தனிமைப்படுத்தி உள்ளார்கள். பெங்களூரு உள்பட கர்நாடகா மாநிலம் முழுவதும் கொரோனா அச்சத்தால் 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெங்களூரில் உள்ளவர்கள் ஆவர் கர்நாடாகவில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் , 5 பேர் இறந்துள்ளனர்.