கர்நாடகத்தில் சட்டசபை இடைத்தேர்தல்.. வாக்குப் பதிவு தொடங்கியது- தப்புமா எடியூரப்பா அரசு?
Recommended Video
பெங்களூரு: கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தல் முடிவுகள்தான் தற்போதைய முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு கடந்த 2018இல் நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைத்தது. பின்னர் அதிகார போட்டி, அமைச்சர் பதவியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
இதனால் முதல்வர் குமாரசாமியின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இதனிடையே 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பொறுப்பேற்றார். 105 பாஜக எம்எல்ஏக்கள் ஒரு சுயேச்சை உள்பட 106 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது.
தகுதிநீக்கம்
இந்த நிலையில் 17 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
15 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்
மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இந்த இரு தொகுதிகளை தவிர்த்து 15 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.
112 பெரும்பான்மை
இந்த 15 தொகுதிகளில் பாஜக சார்பில் 13 பேரும், இரு தொகுதிகளில் தகுதி நீக்க எம்எல்ஏக்களும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மொத்தம் 224 தொகுதிகளில் இரு தொகுதிகள் நீங்கலாக 222 சட்டசபை தொகுதிகள் தற்போது உள்ளன. இதில் பெரும்பான்மைக்கு 112 தேவைப்படுகிறது.
அரசு தப்புமா
தற்போது பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களின் (105 பாஜக+ஒரு சுயேச்சை) ஆதரவு உள்ளது. இன்று நடைபெற்று வரும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பாவின் அரசு தப்பும் என கருதப்படுகிறது. குமாரசாமி அரசை கவிழ்த்த எடியூரப்பாவின் அரசு தப்புமா என்பது டிசம்பர் 9-இல் தெரியவரும்.