பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. கல்லூரியிலேயே ஜோடியாக கோஷமிட்ட மாணவன்-மாணவி.. வினையான விளையாட்டு
பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த விளையாட்டு போட்டிகளின்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என ஜோடியாக மாணவனும், மாணவியும் கத்திய வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் போலீசாரிடம் அவர்கள் சிக்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வந்தது. அதில் ஒரு மாணவனும், மாணவியும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இதுபற்றிய விசாரணையில் இந்த சம்பவம் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் நடந்தது தெரியவந்தது.
பெங்களூர் கல்லூரியில் கோஷம்
அதாவது பெங்களூர் மாரத்தஹள்ளியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த வேளையில் கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் பற்றி சிலர் பேசி கொண்டிருந்தனர்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத்
இந்த வேளையில் தான் திடீரென்று ஒரு மாணவர், மாணவி ஆகியோர் ‛பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பிற மாணவ-மாணவிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக எடுத்த நபர் அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ அங்கிருந்து பரவ தொடங்கி சர்ச்சையை கிளப்பியது.
கல்லூரியில் சஸ்பெண்ட்
இதையடுத்து சம்பவம் பற்றிய விபரம் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மாணவன், மாணவி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதன்பிறகு இருவரிடமும் மன்னிப்பு கடிதம் பெற்ற கல்லூரி நிர்வாகம் அவர்களை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
போலீஸ் வழக்குப்பதிவு
மேலும் சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் பெங்களூர் மாரத்தஹள்ளி போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153(கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தூண்டுதல்), 505(1)பி (பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 2 மாணவர்களும் 18 வயது நிரம்பாதவர்கள். இதனால் சம்பவம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.