செப்.29-ல் கர்நாடகா பந்த் நடத்துறோம்ல..எதுக்கு நாளை பெங்களூர் பந்த்? கன்னட அமைப்பு திடீர் எதிர்ப்பு!
பெங்களூர்: காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராக நாளை பெங்களூர் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காவிரி பிரச்சனையை முன்வைத்து செப்டம்பர் 29-ல் கர்நாடகா பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளைய பெங்களூர் பந்த் அறிவித்தபடி நடைபெறுமா? ஒத்திவைக்கப்படுமா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறந்துவிட்டதால் காவிரி டெல்டா குறுவை சாகுபடிகளைக் காப்பாற்ற முடியும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கை. இதனை காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால் வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் கர்நாடகா திறந்துவிடலாம் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

சொற்ப நீர் தமிழ்நாட்டுக்கு திறப்பு: இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவான வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. இதனடிப்படையில் கர்நாடகா 5,000 கன அடி நீரையும் திறக்காமல் பெயரளவுக்கு சொற்பமான நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டுள்ளது.
கன்னட விவசாயிகள் போராட்டம்: இதற்கும் கூட கன்னட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவின் மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் முழு அடைப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து பெங்களூரில் நாளை பந்த் போராட்டம் நடைபெறும் என கன்னட விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இதற்கு 100க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
பெங்களூர் பந்த்: பெங்களூரில் நாளை நடைபெறும் முழு அடைப்பின் போது ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பின் போது நடைபெறும் பேரணி, ஆர்ப்பாட்டங்களில் பாஜகவினர் பெருந்திரளாக பங்கேற்பர் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
செப்டமப்ர் 29-ல் கர்நாடகா பந்த்: இதனிடையே வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கனண்ட சலுவாளி கட்சி, கன்னட ரக்ஷன வேதிகே (பிரவீண்) ஆகிய அமைப்புகள், காவிரி பிரச்சனைக்காக செப்டம்பர் 29-ந் தேதி பந்த் நடத்தப்படும் என அறிவித்தன. அத்துடன் செப்டம்பர் 29-ந் தேதி கர்நாடகா தழுவிய பந்த் நடத்தப்படும் நிலையில் பெங்களூர் மாநகரில் மட்டும் நாளை முழு அடைப்பு ஏன் நடத்த வேண்டும்? பெங்களூர் முழு அடைப்புப் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கன்னட ரக்ஷன வேதிகே (பிரவீண்) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பெங்களூர் பந்த் நடக்குமா? நடக்காதா?: இதனால் பெங்களூரில் நாளை முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துவதா? இல்லையா? என்பதில் கன்னட விவசாய சங்கங்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. இன்றைய ஆலோசனையின் முடிவில்தான் பெங்களூர் பந்த் நாளை நடைபெறுமா? இல்லையா? என்பது உறுதியாகும் எனவும் கூறப்படுகிறது.
தமிழர் பகுதிகளில் பதற்றம்: இதனிடையே பெங்களூரில் 1991-ல் இதேபோல காவிரி பிரச்சனைக்காக முழு அடைப்பு நடந்த போது தமிழ்நாட்டு தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். தமிழர்கள் சொத்துகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தமிழர்கள் அகதிகளாக அனுப்பி வைக்கப்பட்ட துயரமும் நிகழ்ந்தது. இதனால் பெங்களூரில் பந்த் நடைபெறும் என அறிவிப்பு வெளியான முதலே தமிழர் பகுதிகளில் மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது. அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications