சித்தராமையாவுக்கு கல்தா? முதல்வராகும் டிகே சிவக்குமார்? கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை டிகே சிவக்குமாருக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் டிசம்பர் மாதம் முதல்வர் மாற்றப்பட உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் சிவகங்கா தெரிவித்துள்ளார். இதனால் தற்போதைய முதல்வர் சித்தராமையாவுக்கு ‛கல்தா' கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் புகைச்சல் கிளம்பி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார். 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்ற பிறகு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது.

கட்சி மேலிடத்திடம் டிகே சிவக்குமாருக்கு நல்ல பெயர் இருந்தாலும் கூட முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. இதனால் டிகே சிவக்குமார் அதிருப்தியடைந்தார். இருப்பினும் கட்சியின் எதிர்காலம் கருதி கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியுடன், துணை முதல்வர் பொறுப்பை ஏற்றார்.
இதற்கிடையே தான் அவ்வப்போது டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவரை முதல்வராக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.
அதன்படி நேற்று கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் உசேன், ‛‛டிகே சிவக்குமார் 200 சதவீதம் முதல்வர் ஆவார். அவர் கடவுள் மகாதேவா பெயரில் பதவி பிரமாணம் எடுத்து கொள்வார். அதன்பிறகு காங்கிரஸ் அடுத்த சட்டசபை தேர்தலில் 140 தொகுதிகளில் வெல்லும். டிகே சிவக்குமார் தலைமையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்'' என்றார்.
இக்பால் உசேன் எம்எல்ஏவின் கருத்து பற்றி காங்கிரஸ் எம்எல்சி நாகராஜ் யாதவிடம் கேள்வி கேட்டபோது, ‛‛இப்போது முதல்வராக சித்தராமையா உள்ளார். கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது. டிகே சிவக்குமார் கட்சிக்காக நிறைய பங்களிப்பு செய்துள்ளார். அதேபோல் தான் சித்தராமையாவும் கட்சிக்காக உழைத்துள்ளார்.
முதல்வரை தீர்மானிக்கும் அதிகாரம் இக்பால் உசேனுக்கு யார் வழங்கியது? முதல்வரை நான் தேர்வு செய்ய முடியுமா? முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துக்கு மட்டுமே உள்ளது. வகுப்புவாத சக்திகளை தோற்கடித்து 2028 ம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். அதற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்றார். இதன்மூலம் காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் உசேனின் கூற்றை அவர் மறுத்தார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பசவராஜ் சிவகங்காவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் டிகே சிவக்குமாரை கர்நாடகாவின் முதல்வராக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛விதியில் என்ன எழுதி இருக்கிறது என்பது தெரியாது. இதனை நாம் டிசம்பர் மாதத்துக்கு பிறகு பேசலாம். எங்களின் தலைவர் (டிகே சிவக்குமார்) முதலமைச்சரானால் நான் முதலமைச்சர் ஆனது போல் உணர்வேன். இதுபற்றி டிசம்பர் மாதத்துக்கு பிறகு விவாதிக்கலாம்'' என்றார். இதன்மூலம் இக்பால் உசேனின் கரத்துக்கு பசவராஜ் சிவகங்கா ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி வரும் டிசம்பர் மாதத்துக்கு பிறகு முதலமைச்சர் மாற்றம் செய்யப்பட உள்ளது என்று சூசகமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இக்பால் உசேன் மற்றும் பசவராஜ் சிவகங்கா ஆகியோரின் பேச்சுக்கள் கர்நாடகாவில் புகைச்சலை கிளப்பி உள்ளன.












Click it and Unblock the Notifications