வாக்காளர் குளறுபடி நடக்கும்போது காங்கிரஸ் ஏன் வேடிக்கை பார்த்தது? கர்நாடக. காங். அமைச்சர் கேள்வி
பெங்களூர்: தேர்தல்களில் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி கடந்த வாரம் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது நாடு முழுக்க பேசுபொருள் ஆகியிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டன என்ற ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராக அறியப்படும், அம்மாநிலக் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா, இப்போது கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதற்குத் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இது கர்நாடகாவில் உட்கட்சி மோதல் எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே காட்டுவதாக இருக்கிறது.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெங்களூரில் கடந்த வாரம் நடைபெற்ற ராகுல் காந்தியின் பேரணியில், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகவும், பெங்களூர் மத்தியத் தொகுதி போன்ற முக்கியத் தொகுதிகளில் காங்கிரஸின் தோல்விக்கு வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளே காரணம் என்றும் ராகுல் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் தான் இராஜன்னா கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நமது அரசு ஆட்சியில் இருந்தபோது வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது நமது கட்சி ஏன் கண்டுகொள்ளவில்லை? முறைகேடுகள் இருப்பது உண்மைதான், ஆனால் அது நமது கண் முன்னால் நடந்தது என்பது அவமானகரமானது.
காங்கிரஸ் மீதே தவறு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. எனவே, வாக்காளர் பட்டியலை உரிய நேரத்தில் சரிபார்ப்பது நமது பொறுப்பு. குறிப்பாக மகாதேவபுராவில் பல முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில், நாம் அப்போதே ஆட்சேபனைகளைத் தெரிவித்திருக்க வேண்டும். பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அதைப் பற்றிப் பேசுகிறோம்" என்றார்.
இராஜன்னாவின் இந்தக் கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக டி.கே. சிவகுமார் ஆதரவாளர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இராஜன்னாவையும் மற்ற மூத்த தலைவர்களும் காங்கிரஸ் கட்சி நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் என இரு ஆதரவாளர்களுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
காங்கிரஸ் அமைச்சர்
முன்னதாக காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் கே.எச். முனியப்பா, "வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக காங்கிரஸை மாநிலத்தில் வலுப்படுத்த வேண்டும். பாஜகவின் வளர்ந்து வரும் செல்வாக்கை மறுக்க முடியாது. காங்கிரஸால் பாஜகவைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்றார். இதுபோல அமைச்சர்கள் கூறும் கருத்துகளே காங்கிரஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
டிகே சிவகுமார்
இராஜன்னா உள்ளிட்டோர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ள டிகே சிவகுமார் ஆதரவாளர்கள், இந்த விவகாரத்தை மேலிடத்திடம் கொண்டு செல்லவுள்ளதாகக் கூறியுள்ளனர். இது குறித்து டிகே சிவக்குமார் ஆதரவாளர் எம்எல்ஏ எச்.டி. ரங்கநாத் கூறுகையில், "வாக்குத் திருட்டு விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிக்கை அளிக்க அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைவதற்கு முன்பே நமது கட்சிக்கும், அரசுக்கும் எதிராகப் பேசுவதை மன்னிக்க முடியாதது" என்றார்.
இதற்கிடையே முன்னாள் மகாதேவபுரா எம்எல்ஏவும் பாஜக முக்கிய தலைவரான அரவிந்த் லிம்பாவளி கூறுகையில், "ராகுல் இப்போதாவது கண்களைத் திறக்க வேண்டும், ஏனெனில் இப்போது நாங்கள் சொன்னதையே தான் அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் பேசுகிறார்கள்" என்றார். மேலும், அவர் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்துப் பேசிய போது, சிவகுமாரின் கனகபுரா தொகுதியைக் குறிப்பிடவில்லை.. மாறாக சித்தராமையாவின் வருணா தொகுதி மற்றும் சித்தராமையா ஆதரவாளர்களின் தொகுதிகளை மட்டுமே சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications