கொர்ர்ர்.. வெள்ள பாதிப்பு ஆலோசனையில் அசந்து தூங்கிய கர்நாடக அமைச்சர்! சூப்பருங்க.. காங்கிரஸ் கிண்டல்
பெங்களூர்: பெங்களூரில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஒருவர் உறங்கியதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதில் கர்நாடகாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு முதல் பெங்களூரில் பெய்து வந்த கனமழையால் அந்த நகரமே வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.

பெங்களூரில் கடும் பாதிப்பு
இதனால் பெங்களுர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியவில்லை. மேலும், கனமழையால் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருப்பதால் அத்தியாவசி உணவுப்பொருட்கள் கிடைக்காமலும் பெங்களூர் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், கர்நாடாகாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், அதனை சரிசெய்யும் நடவடிக்கைகள் குறித்தும் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தூக்கம்
இந்தக் கூட்டம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. அப்போது வருவாய்த் துறை அமைச்சர் அசோக் தூங்குவது போல கண்ணை மூடிக்கொண்டிருந்தார். இதையடுத்து, அமைச்சர் அசோக்கை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. வரலாறு காணாத வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் போது ஒரு அமைச்சரால் எப்படி தூங்க முடிகிறது என அக்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.

காங்கிரஸ் கிண்டல்
இதுகுறித்து கர்நாடகா காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அசோக் தூங்குவது போன்ற புகைப்படம் பதிவிடப்பட்டு, அதற்கு கீழே, "கர்நாடகா தலைநகர் பெங்களூரும், மற்ற பல மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கு தீர்வு காணும் கூட்டத்தில் நமது அமைச்சர் அசோக் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார். எதை பற்றியும் கவலை இல்லாத மனிதரால்தான் இப்படி இருக்க முடியும். அவரை பார்ததால் மக்கள் ஆரவாரமிக்க சந்தையில் கூட அவரால் நிம்மதியாக தூங்க முடியும் எனத் தோன்றுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications