மதமாற்றத் தடை மசோதா: கிழித்து எறிந்த காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்.. கர்நாடக சட்டசபையில் அமளி
பெங்களூரு: கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய மதமாற்றத் தடை மசோதா அம்மாநிலச் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மதமாற்ற எதிர்ப்பு மசோதா நகலைச் சட்டசபையிலேயே கிழித்து எறிந்தார்.
கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குப் பல மாதங்களாகவே கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது.
இந்தச் சூழலில் கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் வகையிலான புதிய மசோதாவுக்குக் கர்நாடக அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
அப்போது செல்போன் உரையாடல்.. இப்போது குழந்தைகளின் இன்ஸ்டா கணக்கு ஹேக்?? பிரியங்கா காந்தி பரபர புகார்
என்ன சட்டம்
'கர்நாடக மதச் சுதந்திரத்திற்கான உரிமைக்கான பாதுகாப்பு மசோதா, 2021' என்று அழைக்கப்படும் இந்த மசோதாவுக்கு எவ்வித மாற்றம் இன்றி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி மைனர், பெண் அல்லது எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த நபர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். மற்ற பிரிவினரை மதமாற்றம் செய்தால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
காங்கிரஸ் எதிர்ப்பு
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நிகழ்வில் அதிக அளவிலான மக்களை மதமாற்றம் செய்பவர்களுக்கு 3-10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இருப்பினும், இந்த மசோதாவுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிழித்து எறிந்தார்
இந்த மசோதாவை மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்தார். இதற்குக் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மதமாற்ற எதிர்ப்பு மசோதா நகலைச் சட்டசபையிலேயே கிழித்து எறிந்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடக்கம் முதலே இந்த மசோதாவைக் காங்கிரஸ் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடும் எதிர்ப்பு
முன்னதாக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுகையில், "குறிப்பிட்ட மதத்தைக் குறிவைத்து இந்த மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க ஏற்கனவே சட்டம் உள்ளது. கட்டாய மதமாற்றம் நடந்தால் அரசு நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிவைத்து இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்" என்றார்.
அனைத்து எதிர்க்கட்சிகள்
அதேபோல மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி.குமாரசாமியும், இந்த மசோதாவை தங்கள் கட்சி ஆதரிக்காது என்று கூறியிருந்தார். கர்நாடகாவின் பெலகாவி பிஷப் டெரெக் பெர்னாண்டஸ், கர்நாடக அரசின் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கடுமையாகச் சாடியுள்ளார், இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் என்று அவர் குறிப்பிட்டார். அதேநேரம் இந்த மசோதாவால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று வாழத் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.