"கமிஷன் கேட்டார்.. என் சாவுக்கு காரணம் அமைச்சர்” கர்நாடகாவில் புயலை கிளப்பும் கான்ட்ராக்டர் தற்கொலை
பெங்களூரு : கர்நாடக பாஜக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் கூட்டாளிகள் ஒப்பந்தம் ஒன்றிற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர், தற்கொலை செய்து கொண்ட நிலையில் "என் இறப்புக்கு கர்நாடக அமைச்சர் தான் பொறுப்பு" என எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சராக ஈஸ்வரப்பா பணியாற்றிவருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப், மசூதிகளில் ஒலிபெருக்கி களுக்கு தடை உள்ளிட்ட விவகாரங்களில் பல கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர் தான் இந்த ஈஸ்வரப்பா.

காண்டிராகடர் தற்கொலை
இந்த நிலையில் காண்ட்ராக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபர வழக்கிலும் ஈஸ்வரப்பாவின் பெயர் அடிபடுவது பாஜகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இந்தலகா பகுதியைச் சேர்ந்தவரான சந்தோஷ் பாட்டில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். மேலும் தீவிர பாஜக தொண்டரான இவர் அப்பகுதிகளில் பல்வேறு பணிகளை எடுத்து செய்து வருகிறார். நேற்றிலிருந்து சந்தோஷ் பாட்டில் திடீரென மாயமான நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

லஞ்சப் புகார்
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் மாயமான பாட்டீல் உடுப்பியில் உள்ள தனியார் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது தெரிவந்தது. இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலிசார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தற்கொலைக்கு முன்னதாக பாட்டீல் இன்று அதிகாலை மீடியாக்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் சில செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது, அவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், அவரது மரணத்திற்கு கர்நாடக அமைச்சரான ஈஷ்வரப்பா தான் காரணம் என்றும் அதில் குற்றம் சாட்டியிருந்தார்.

தற்கொலை கடிதம்
மேலும் சந்தோஷ் பாட்டீல் தனது தற்கொலை கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜக மூத்த தலைவர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் தனது மரணத்திற்குப் பிறகு தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார். "எனது மரணத்திற்கு அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மட்டுமே காரணம். எனது ஆசைகள் லட்சியங்களை ஒதுக்கி வைத்து இந்த முடிவை எடுக்கிறேன். பிரதமர், முதல்வர், நமது அன்புக்குரிய தலைவர் எடியூரப்பா மற்றும் அனைவரும், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன். ," என்று அவர் எழுதியுள்ளார்.

ஈஸ்வரப்பா மறுப்பு
சந்தோஷ் பாட்டீலின் நண்பர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டபோது அவரது அறைக்கு அருகில் தான் தங்கியிருந்த நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாட்டீலின் மரணம் குறித்து பதிலளித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, அவர் தற்கொலை செய்து கொண்டதை ஊடகங்கள் மூலம் அறிந்ததாகவும், அவரைத் தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும் ஒப்பந்ததாரரின் மரணம் தொடர்பாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்.

எதிர்கட்சிகள் கோரிக்கை
"ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. சந்தோஷ் பாட்டீலுக்கு எதிராக நான் தொடுத்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். நான் எங்கும் தவறு செய்யவில்லை என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன்" என்று ஈஸ்வரப்பா உறுதியாகக் கூறினார். கடந்த மாதம் பாட்டீல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு கடிதம் எழுதியதையடுத்து, ஈஸ்வரப்பா கடந்த மாதம் லஞ்சப் புகாரை மறுத்தார்.

சித்தராமையா குற்றச்சாட்டு
இதனிடையே, அவரது மரணத்திற்கு கர்நாடக பாஜக தான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். "கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீலின் மரணம் சோகமானது & @BJP4Karnataka'வின் 'கமிஷன் அரசியலின்' விளைவு. சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது தியாகத்திற்கு நீதி கிடைக்கட்டும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications