பெங்களூருக்கு வந்த சோதனை பாருங்க.. வீட்டை சுற்றிலும் வெள்ளம்.. ஆனால் குடிக்க தண்ணீர் இல்லை!
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரு நகரத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
கர்நாடகாவில் மூன்று நகரங்களில் நேற்று இரவு மட்டும் 125மி.மீ மழை பதிவாகியிருந்த நிலையில் பெங்களூருவில் சுமார் 131மி.மீ அளவில் மழை பொழிந்துள்ளது.
இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தரைதளம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதேபோல சாலைகளிலும் வெள்ளம் போல மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்பா.. சென்னையில் இவ்வளவு தெருவோரக் கடைகளா? 5 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்த எண்ணிக்கை
குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
கடந்த சில நாட்களாகவே தென்னிந்தியாவில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இயற்கையிலேயே வடிகால் வசதி கொண்ட கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை இந்த மழை பதம் பார்த்துள்ளது. பெங்களூருவில் மேம்படுத்தப்படாத கட்டமைப்பு வசதிகள் கரணமாக மழை நீர் ஏறத்தாழ நகரின் அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைதளங்கள் மழை நீர் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவானது.
தலைமைச் செயலக கேன்டீன்
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது, இந்த கனமழை காரணமாக அம்மாநில தலைமைச் செயலக கேன்டீனில் வெள்ளநீர் புகுந்துள்ள வீடியோதான் அது. இந்த நீர் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தேங்கியிருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை சிலர் பகிர்ந்து மாநில அரசின் கட்டமைப்பு வசதி குறித்து கேள்வியெழுப்பி வருகின்றனர். முன்னதாக மழை நீர் பல இடங்களில் தேங்கியிருந்த நிலையில் நேற்றிரவு பெங்களூரு மாநகராட்சியின் தலைமை கமிஷ்னர் நள்ளிரவில் ஆய்வு செய்திருந்தார்.
நீரேற்று நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பும் நீரேற்று நிலையம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. TK ஹல்லியில் உள்ள பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் (BWSSB) நீரேற்று நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து அங்குள்ள இயந்திரங்கள் பழுதாகியுள்ளன. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு பெங்களூரில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த நீரேற்று நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட இருக்கிறார்.
முக்கிய பகுதிகள் பாதிப்பு
தற்போதுவரை நகரில் 50 பகுதிகளுக்கு காவிரி நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளான கோரமங்களா, மடிவாளா, சதாசிவநகர், இந்திராநகர், வசந்தநகர், பிரேசர் டவுன், பேலஸ் குட்டஹள்ளி, யஷ்வந்தபுரம், கோல்ஸ் பார்க், கடுகோடனஹள்ளி, மத்திகெரே, சேஷாத்ரிபுரம், ஆர்டி நகர், மல்லேஸ்வரம் மற்றும் பல முக்கிய பகுதிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும என
பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தண்ணீர் விநியோகம் பாதிப்பு
டிகே ஹள்ளியில் உள்ள நீரேற்று நிலையத்தில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இப்பணியை BWSSB-ன் தலைவர், பொறியாளர்கள், நகர்ப்புற வளர்ச்சி செயலாளர் மற்றும் பிற அதிகாரிகள் நேரில் இருந்து பார்வையிட்டு வருகின்றனர். அநேகமாக இப்பணி இன்று மாலைக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு இந்த பணிகள் முடிக்கப்பட்டாலும் இன்றும் நாளையும் தண்ணீர் விநியோகம் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த கணமழை காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க படகுகள் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மழை நகரின் சுற்றுப்புறத்தில் உள்ள ஏரிகளை நிரப்பியுள்ளது. இதன் காரணமாக நீர் வடிய வாய்ப்பில்லாமல் அப்படியே தேங்கி நின்றுள்ளது.